Saturday, April 5, 2025

தீராப்பெருவெளி - த. பொன்னரசன்

தீராப்பெருவெளி 
(கவிதை தொகுப்பு)
த. பொன்னரசன்
மகிழினி பதிப்பகம் 

90951 67007 




உனக்கான காத்திருப்பில்
 வனாந்திரப் பெருமழையில்
 முழுவதும் நனைந்துவிட்டேன்
ஆங்கே தலைதுவட்ட
 தேவையோர் வண்ணத்துப்பூச்சி...


மிச்சமற்று எரித்துவிடு சகியே நம்
மீகாமம் சாகட்டும்

நடுநிசியில் நீரிறைக்கும் சப்தம்
 விழிகளில் தொங்கும்
 நிறைகுடங்களில் தளும்பும் மனம்...

உனக்கும் எனக்குமான ஆயத்தொலைவு - 
ஒரு கற்பனை நகர்தலுடன் சுழியமாகிறது...

என்னைத் திறப்பதற்கான கடவுச்சொல் 
என்னில் வேர்களாய் வியாபித்திருக்கும் நீயேயறிவாய்
 அந்த வேர்ச்சொல்
 உன் பெயர்ச்சொல் என்றறிய 
ஏனிந்த தாமதம்...

கையை விட்டு நழுவிய
 கண்ணாடிச் சில்லுகளிலிருந்து
 பிறப்பெடுக்கும் எனக்கான பிம்பத்தில்
ஓராயிரம் முறை
உன்னையே குவிக்கிறது என் விழி...

வாழ்வின் எந்த விசையும்
 என்னை ஈர்த்துவிடவில்லை...
எனினும் 
இவ்வாழ்வு தட்டுப்படுமென 
தடவுகிறதென் கைகள்..


திசை வேறு
 பயணம் ஒன்று 
மனதிற்கு
 மைல்கற்களில்லை...

பட்டால் தெரியும் என்பது
 பட்டுப்போன பின்னே தெரிகிறது...
மரணம் மனிதனைத் திருத்துகிறது...


இருகைகளின் இணைவினை
இவ்விருக்கை இன்னமும் ஈரப்படுத்தி வைத்திருக்கிறது...
என்றைக்காவது அப்பூங்கா 
செல்ல நேரிட்டால் 
ஒருநிமிடம் 
அவ்விருக்கையில் அமர்ந்துவிட்டுப்போ... 
அதன் ஆயுளாவது நீளும்....


வெளியில் உலவும் யாவரின் மூச்சையும் 
பருகாமல் உயிர்வளர்ப்பதெங்கனம்?
பதில் வாய்க்காத ஒற்றைக்கேள்விதான் 
அறம் எனப்படுவது யாதெனில்?...

 தாவர வாழ்வு 
தன்னறம் போதித்தது 
எனக்கு...


மலர்தலின்
ஆழம் கூடக்கூட
 அழுத்தத்தைக் கூட்டுகிறது கடல்...
ஆழம் கூடக்கூட
 அழுத்தத்தைத் தணிக்கிறது காதல்...

குத்திக்கிழியுறும்
யுத்தியறியும்
கத்திதனைப்
பொத்திப் பொலிவுற
வைத்தெந்தன்
புறமுதுகில் புகுத்திவிட்டாய் எனினும் 
எனக்குக் கண்கள் பிடரியிலே...

மந்தையில் சேராத என்னை
சந்தையில் சேர்த்ததில்
 என்ன விந்தையுள்ளது தந்தையே?...


ஆவி பறக்க காத்திருக்கிறேன் நான்
பனிக்கூழென பனியாவியாய் கவிந்திருக்கிறாய் நீ
தட்ப வெப்பம்
 வேறு வேறாகிலும் 
நமக்கான ஆவி 
ஒன்று போலத்தானே பரவிக் கூடுகிறது


காற்றின் கரைசலினூடே 
உன் உயிரை உமிழ்நீரோடு 
குழைத்து தூதனுப்பினாய்...
வண்ண ஒளிர்வினில் பறந்துவரும்
 சோப்புக்குமிழ்களாக மெல்லத்தரையிறங்கும்
 "காற்றிட்ட முட்டைகளை" நான் கைகளில் ஏந்துகையில் ..
உடைந்து சிதறிய குமிழ்களில்
 உன் ஈரம் பூசியிருந்த என்னுயிர்க்கு 
உரையெழுத உன்னைவிட்டால் யாருமில்லை...

Comments





வீரான்குட்டி கவிதைகள்

வீரான்குட்டி கவிதைகள் 

 மலையாளத்திலிருந்து தமிழில்:சுஜா 

தன்னறம் வெளியீடு

9843870059



கேள்:

கல்லிடம் கேள்
 எவ்வளவு காத்திருந்து ரத்தினமாகியதென நீர்த்துளியிடம் விசாரி
 எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென 
உதடுகள் இருந்திருந்தால் 
அவை சொல்லியிருக்கும் 
அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்று.
*

குறைந்து குறைந்து

காணும் முன்பு 
எத்தனை பெரியவராய் இருந்தோம் பரஸ்பரம் நாம்!
கண்டுகழித்ததும் சிறிதானோம் 
பேசத் தொடங்கியபோது அற்பமானோம் இனி ஒன்றாக நடக்கத் தொடங்கினால் குறைந்து குறைந்து 
இருக்கிறோம் என்றே 
சொல்ல முடியாத அளவுக்கு 
முழுதுமாய்த் தீர்ந்துவிடுவோமோ
 நாம் ஒருவருக்கு ஒருவர்?
கடவுள் காணக் கிடைக்காதது சாலவும் நன்றல்லவா?
*


ரூமிக்கு

காயங்கள் பட்டாலென்ன 
உதடுகளுடன் எப்போதும் வாசிக்க முடிந்ததல்லவா?
புல்லாங்குழல் பாடுகிறது.
*

சொல்

சொல்
இரண்டுபேர் 
காதலிக்கத் தொடங்கும்போது
அவர்களை மட்டுமாக்கி
 சுற்றியுள்ள உலகம் 
சட்டென்று எங்கே போய்த் தொலைகிறது?
*

யாரும் காணாதவாறு

யாரும் காணாதவாறு 
நீ செய்து கொண்டிருப்பது அனைத்தும் தெரியும் எனக்கு
யாரும் கேட்க முடியாத மொழியில் 
அதைச் சொல்ல முடியாததன்
 வருத்தம்தான் எனக்கு
*

வீணாக

சுயரூபம்
நீட்டியும்
குறுக்கியும் 
ஆடும் நிழலின்
விளையாட்டை
அற்பமாக
நினைக்க வேண்டாம்.
எப்போதும்
ஒருவனின்
கீழேயே
இருக்க வேண்டி வந்ததன்
துக்கத்தை
மறப்பதற்கு
அது
முயற்சி செய்து கொண்டிருக்கலாம்
*

நமக்கிடையில் இந்த மரம்

நமக்கிடையில் இருக்கும் இந்த மரம் ஊமையென்றுதானே எண்ணுகிறாய்?
கூர்ந்து கேள் 
பிரியப்பட்ட யாருடனோ 
அது பூக்களால் பேசுகிறது 
காய்களால் வாக்குறுதியளிக்கிறது
 அந்தத் தளிரிலைச் சிவப்பு 
வீணென்றா நினைக்கிறாய்? 
அப்படி அந்த மரம் ஊமையென்றால் 
காதலே அதற்குப் பழியேற்கட்டும்.
*


ஒவ்வோர் இலையும்

நாம் இங்கிருந்துகொண்டு 
பூமியின் எல்லா மரங்களிலும்
 எத்தனை இலைகள் 
என்று எண்ணத் தொடங்குகிறோம் இலைகள் எவ்விதத்திலும் ஒத்துழைப்பதில்லை 
அவற்றிற்கு அதொன்றும் முக்கியமில்லை.
ஒவ்வோர் இலையும் 
அதனதன் அதீத தனிமையில், உதிரும்போதுதான் நாமதைத் தெரிந்துகொள்கிறோம் அவ்வளவுதான்.
*

கலந்துவிட்ட வெளிச்சங்கள்

முன்பொரு முறை
நாம்
ஒருவர்க்கொருவர் 
பரிசளித்துக்கொண்ட விளக்குகளில் உன்னுடையது, என்னுடையது என 
வேர்பிரித்தெடுக்கச் சாத்தியமில்லை 
பிரியும்போது
எனில்
அவற்றின் ஒன்றாய்க் கலந்துவிட்ட வெளிச்சத்தை 
எப்படி வேறுவேறாக்குவது? கொண்டுபோவது?
*

அறியாமல்

நேரம் மெல்ல விடிவது காண 
காத்து விழித்திருந்தீர்கள் 
காண முடியவில்லை 
நேரம் விடிந்துவிட்டது

பூ மலர்வதைக் காண 
கண் இமைக்காமல் இருந்தீர்கள். 
காணவில்லை 
பூ மலர்ந்துவிட்டது.

இப்படியே போனால் 
நீங்கள் கண்ணில் எண்ணெய் ஊற்றி பார்த்துக்கொண்டேதான் இருக்கப்போகிறீர்கள். 
அதனிடையில்
 எப்போதாவது 
உங்களுக்குத் தெரியாமல் நானும் இல்லாமல் போய்விடுவேன்.
*


சுவாதீனம்

செத்தவரை
கொண்டுபோகும் கூச்சல்
எங்களை
சட்டென்று பெரியவராக்கியது

ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம்
என்றொரு குரல்
சைக்கிள் பெல்லோடு
எதிரே வந்து
எங்களைச் சின்னஞ்சிறு
குழந்தைகளாக்கும் வரை.
*

வெள்ளைக் கொக்கின் படம்

மேகத்தில்
யானையின்
முயலின்
வடிவங்களைக் கற்பனை செய்வேன்.

சில நேரங்களில் குருவியை
வீட்டின் அருகில் உள்ள
வயல் கரையில்
ஆழத்தை உற்று நோக்கியபடி
அமர்ந்திருக்கும் கொக்கின் படத்தை வைத்திருந்தது குளம்.

கோடையில் குளம் வற்றியது பிறகு கொக்கைக் காணவேயில்லை அந்தப் படத்திற்கு என்ன ஆகியிருக்கும்?

இப்போது
சில நேரங்களில்
மேகத்தில்
என்னால் பார்க்க முடிகிறது
வெள்ளைக் கொக்கின் படம்.
*


நேர்மை படும் பாடு - ஞான ராஜசேகரன்

 நேர்மை படும் பாடு

ஞான ராஜசேகரன் 
டிஸ்கவரி புக் பேலஸ்.



ஞான ராஜசேகரன் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அலுவலர், கலை இலக்கிய ஆர்வலர் ,திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.

அவர் தனது அரசுப் பணி அனுபவங்களை விவரிக்கும் 32 சுவையான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். 

நூலின் தலைப்பே சொல்வது போல தனது பணிக்காலத்தில் இயன்றவரை நேர்மையாக கடமையை செய்தவர் ஞானசேகரன். அவ்வப்போது எதிர்கொண்ட சவால்களையும் நெருக்கடிகளையும் சுவைபட கூறி இருக்கிறார். அதே நேரத்தில்
நேர்மை என்ற பெயரில் தேவையற்ற கெடுபிடிகளை செய்யும் மனிதாபிமானமற்ற அலுவலர்களின் செயல்பாடுகளையும் விமர்சிக்கிறார்.

கீழ்கண்ட வரிகளே நூலாசிரியரின் ஆளுமையை நிரூபிப்பதாக உள்ளது.
 
"ஐஏஎஸ் தந்த நேர்மை திமிரை வெளிகாட்டி அரசியல்வாதிகளுடன் ஆன உறவை நாசமாக்கிக் கொள்வதால் மக்களுக்கு நமக்கோ யாதொரு பலனும் இல்லை.

என் சர்வீஸில் பலமுறை அரசியல் தலைவர்கள் சிபாரிசு செய்ய லிஸ்ட்டோடு என்னிடம் வந்திருக்கிறார்கள்.அவர்கள் எப்போதும் தொண்டர்கள் கூட்டத்துடன்தான் வருவது வழக்கம். சிபாரிசு செய்ய வரும் அரசியல் தலைவரின் கவலை எல்லாம் அவர்கள் கொண்டு வருகிற சிபாரிசுகளை பற்றி இருப்பதில்லை, தொண்டர்களின் முன் அதிகாரி தன்னை கௌரவமாக நடத்த வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் பிரதான பிரச்சனையாக இருக்கும். இது போன்ற சமயங்களில் தலைவர்களை அன்புடன் வரவேற்று நன்றாக உபசரித்து நான் என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன் என்று சொல்லி அவர்கள் தரும் லிஸ்டை வாங்கிக்கொள்வேன். அவர்களும் மன நிறைவோடு சென்று விடுவார்கள். அவர்கள் தந்த லிஸ்ட்டை நான் செயல்படுத்தியதே இல்லை. அவர்களும் அதைப்பற்றி விசாரிக்க திரும்ப வந்ததும் இல்லை" 

கேரளா மாநிலத்தில் ஆட்சிப் பணி அதிகாரியான இவருக்கு மெச்சத்தகுந்த நேர்மையான முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள் . இந்நூல் வழியாக அறியப்படும் கருணாகரன்,உமன் சாண்டி, ஏகே அந்தோணி ஆகிய முதல்வர்கள் இப்படியும் அரசியல் தலைவர்கள் இம்மண்ணில் இருக்கிறார்களா என்று வியக்க வைக்கிறார்கள்.

கேரள மாநிலம் கல்வி அறிவும் அரசியல் முதிர்ச்சியும் நிறைந்த சமூகம். 
திருச்சூர் ,பாலா மாவட்ட கலெக்டர், திரைப்பட தணிக்கை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தது சவாலானது.

சான்றாக சில அனுபவங்கள்..
 
மாவட்ட ஆட்சியராக ராஜசேகரன் உள்ளார். பாரதப் பிரதமர் திருச்சூர் வந்திருக்கிறார்.உடன் அவரது குடும்பமும் . ஆட்சியர் தலைமையில் பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் முனைப்போடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் டெல்லி செல்ல தயாரான நிலையில் காஞ்சி சங்கரச்சாரியார் மரணம் அடைந்த செய்தி வருகிறது. பிரதமர் காஞ்சிபுரம் செல்ல நினைக்கிறார். துக்க நிகழ்ச்சிக்கு செல்ல நூல் புடவை இல்லையே என்ற கவலை பிரதமரின் மனைவிக்கு. நகரில் உள்ள பெரிய கடை நள்ளிரவு திறக்க செய்யப்படுகிறது. பாதுகாவலர்களள் சூழ மணி நேரம் செலவிட்டு திருப்தியாக திரும்பி வருகிறார். பாதுகாவலர்கள் சொன்ன செய்திதான் அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு நூல் புடவை கூட எடுக்கவில்லை. விலை உயர்ந்த 5 பட்டுப்புடவைகளை மட்டுமே வாங்கிக் கொண்டார், என்பதுதான் அது. அரசு செலவு தான் என்பதை தனியாக சொல்ல வேண்டியது இல்லை.

இந்திய அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது. கூட்ட அரங்கின் முன் போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் தயாராகின்றன. கேரளாவில் இது வாடிக்கை . தேசிய அளவில் நடக்கும் கூட்ட அரங்கத்துக்கு முன் போராட்டத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் ஆட்சியர்.

கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் முந்திய நாள் மதியமே வந்து ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள் .அவர்களிடம் இன்று மாலையே கூட்டத்தை நடத்தி விட்டால் என்ன என்று ஆலோசிக்கிறார். வந்தவர்களுக்கு நல்ல யோசனையாகப்படுகிறது. மறுநாள் கடவுளின் தேசமான கேரளாவில் சுற்றுலா சென்று திரும்பலாம் என்ற எண்ணத்தில் அனைவரும் பச்சை கொடி காட்டுகிறார்கள். இரவே கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மறுநாள் போராட்டக்காரர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்வரான நூலாசிரியர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் செயலாளராக இருக்கிறார் .மணிப்பூர் மாநிலத்தின் புகழ்பெற்ற கண்ணையா குழுவினரின் மூன்று நாள் நாடக நிகழ்வை திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்கிறார்.
அனுமதி இலவசம்.

 முதல் நாள் நாடகம் துவங்கிய நிலையில் 20 பேர் மட்டுமே பார்வையாளர்கள். 250 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஹாலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிறைய விளம்பரமும் செலவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடகத்தை ரத்து செய்து விடலாமா என்று யோசிக்கிறார். திடீரென்று ஒரு மாற்று சிந்தனை.

மறுநாள் நாடகம் பார்க்க கட்டணம், முன்பதிவு செய்ய வழிமுறைகளையும் செய்தித்தாளில் விளம்பரம் செய்கிறார். 

உடனே அரசியல்வாதிகள்,உயர் அதிகாரிகளிடமிருந்து விஐபி பாஸ் கேட்டு தொடர்ந்து கோரிக்கைகள் வருகிறது. மறுநாள் மாலை அரங்கம் நிறைந்ததால் நின்று கொண்டே நாடகம் பார்க்க வேண்டிய சூழல். 

 அதிகாரத்தை பயன்படுத்தி இலவச பாஸோடு வந்தவர்கள் தான் அனைவரும். டிக்கெட் வாங்கி வந்தவர்கள் ஒருவரும் இல்லை என்பதை வேடிக்கை.

  ஆட்சி பகுதியில் உள்ள ஒரு கிராமத்து தேவி திருவிழா. திருவிழாவின் இறுதி நாளில் நீண்ட ஊர்வலம் புறப்பட்டு அப்பகுதியில் உள்ள பெரிய மசூதியின் வழியாக செல்லும். காலங்காலமாக அமைதியாக நடந்து வந்த இந்நடைமுறை சமீபடத்திய ஆண்டுகளில் பதட்டமான சூழலிலை உருவாக்குகிறது. மசூதியில் பாங்கு ஓதும் நேரத்தில் ஊர்வலம் செல்பவர்கள் கூச்சலிடுவதும் கல்வீச்சும் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர் திருவிழா நடத்துவது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இம்முறை ஆட்சியாளர் நம்மவர். பிரச்சனை இல்லாமல் ஊர்வலத்தை நடத்தி முடிக்க விரிவான ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தாலும் பதற்றமான சூழல் உள்ளது. இவை எதுவும் இல்லாமல் எளிமையாக எப்படி பிரச்சனையை தவிர்த்தார் என்பது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.   
அதிகாரத்தையும் போலீஸ் படையையும் நம்பியே நிர்வாகம் செய்ய நினைப்பவர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் வழிகாட்டியாக அமையும்.

அரசு அதிகாரிகளுக்கு இந்நூல் வழிகாட்டும். பொதுமக்களுக்கு அரசு எந்திரத்தின்மேல் நம்பிக்கையையும் மரியாதையையும் விதைக்கும். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

நிறைகுளம் - பெ.மகேந்திரன்

நிறைகுளம் - நாவல்

 பெ.மகேந்திரன் 

மின்னங்காடி பதிப்பகம் 

78240 49160


பேய்ந்து விளையுது மலையாள பூமி 

பாய்ந்து விளையுது தஞ்சாவூர் பூமி

 காய்ந்து விளையுது கரிசல் பூமி.

நான் சிறுவனாக இருக்கும்போது பொடிமட்டை என்ற பெரியவர் ஊரில் இருந்தார். அவர் இயற்பெயர் யாருக்கும் தெரியாது ‌.
நல்ல பெரும்பாடி ஆள். எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பார். பாக்கெட் நிறைய காகிதங்களும் ஒரு முரட்டு பேனாவும்.  கையில் காபிதூள் நிறத்தில் ஒரு தோல்பையும் அவரது அடையாளம்.

நான் இல்லாவிட்டால் மொரப்பூருக்கு ரயில் வந்திருக்காது, நான் சொல்லி தான் அரூர் சர்க்கரை ஆலை வந்தது என்பார். வாணியாறு அணை கட்ட மனு எழுதி இருக்கிறேன் என்பார். அன்றாடம் மனு எழுதுவதே அவரது வேலை. 

கரிசல்காடு படைப்பாளிகள் விளையும் மண். அம்மக்களின் கனவுகளை, எதிர்பார்ப்புகளை காலந்தோறும் படைப்புகளாக எழுதி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் நிறைகுளம் கிராமம்.
கரிசல் மண்ணின் சம்சாரிகள் வானம் பார்த்த பூமியில் நம்பிக்கையை மட்டுமே முதலீடாக கொண்டு விவசாயம் செய்கிறார்கள். வானம் பார்த்த பூமியில் விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீருக்கே போராடும் நிலை உள்ளது ‌

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் வழியாக அருப்புக்கோட்டை, சாயல்குடி, கடலாடி வரையுள்ள பகுதிகளுக்கு நீர் பாசனத்திற்காகவும் குடிநீர் வசதிக்காகவும் அழகர் அணை என்ற ஒரு திட்டம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசு பொருளாக உள்ளது. சுதந்திரம் பெற்று எத்தனை ஆட்சி மாற்றம் வந்தாலும் இது நிறைவேறியதாக இல்லை.

இந்த பின்னணியில் கரிசல் மக்களின் வாழ்வியலை நுட்பமாக பேசும் படைப்பு இது.

கடந்த கால முக்கிய நிகழ்வுகளை புனைவுகளில் பொருத்தமாக கையாள்வது நல்ல யுக்தி. அந்த அடிப்படையில்
தனுஷ்கோடி புயலில் குடும்பத்தை இழந்து அனாதை சிறுவனாக நிறைகுடம் கிராமத்தில் தஞ்சம் புகுந்து மக்களோடு நிறைந்துவிட்டவர் ஆதிமூலம்.

ஊர் மக்களால் நம்பிக்கையோடு வழிபட்ட பிள்ளையார் திடீரென்று களவாடப்படுகிறார். பிள்ளையார் இல்லாத ஊரில் மழை இல்லை, நல்லது கெட்டது இல்லை என்று புலம்பி மீண்டும் நிறுவ முயலும் ஊர்மக்கள். 

ஒரு குடம் குடிநீருக்காக அள்ளாடும் கிராமத்தின் வழியே நகரத்தின் குடிநீர் தேவைக்காக பதிக்கப்படும் பெரிய குழாய். தண்ணீர் செல்லும் சத்தத்தை காது கொடுத்து ஏக்கத்தோடு கேட்கும் மக்கள்.

இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் ஆற்றில் அணை கட்டி நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த மக்களை திரட்டி தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் இளைஞர் ராமகிருஷ்ணன்.

மக்கள் பிரச்சனைகளை படைப்புகளில் கையாள்வது சவாலானது. அதை திறம்பட செய்திருக்கிறார் நூலாசிரியர்.
மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை தற்காலத்தோடு பொருத்தி எழுதியிருப்பது சிறப்பு .

நூலாசிரியரே நல்ல ஓவியர் என்பதால்
ஆங்காங்கே தனது சிறு தூரிகைகளாலும் நாவலை அழகுபடுத்தியிருக்கிறார்.

கரிசல் சம்சாரிகளின் வாழ்க்கையை எழுத கிரா வின் பேனா மகேந்திரன் அவர்களின் கைக்கு வந்திருக்கிறது. இன்னும் நிறைய எழுதுவார்.

Comments



கற்பது உலகளவு - கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்

கற்பது உலகளவு 

கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்

விகடன் பிரசுரம்.




கல்விதான் சமூகத்துக்கு வேர். ஒரு தேசம் கல்வியை எவ்வாறு புரிந்து கொள்கிறது, அடுத்த தலைமுறைக்கு எப்படி கல்வியை எடுத்து செல்கிறது என்பதில்தான் அத்தேசத்தின் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் அடங்கி இருக்கிறது.

கல்வி என்பது ஓர் இனிமையான பயணம். ஒரு குழந்தை பிறந்ததும் எப்படி இயல்பாக மொழியை கற்றுக் கொள்கிறதோ அப்படி ஒரு நிகழ்வுதான் கல்வியும். 

இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி அறிவு பெற்று மனிதவளம் மிகுந்திருப்பது தமிழகத்தில்தான். கல்வியை முறைப்படுத்தி தகுந்த தரத்தில் வழங்கினால் தமிழகம் உலகத்தை வழிநடத்தும் வல்லமை பெறும். புதிய தொழில்நுட்பங்கள் வரவர அதற்கு ஏற்ப திட்டங்களையும் கற்பித்தல் முறைகளையும் உருவாக்க வேண்டும்.

மாணவர்கள் உலகளாவிய வாய்ப்புகளுக்கு எப்படி எல்லாம் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். பொருத்தமான கல்வியை எவ்வாறு தேர்வு செய்வது என்றெல்லாம் விரிவாக பேசுகிறது இந்நூல். 

நூலாசிரியர் தா.நெடுஞ்செழியன் அவர்கள் முன்னணி கல்வி ஆலோசகர்.
 இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியவர். அரசின் பல்வேறு கல்விக் குழுக்களில் உறுப்பினராக அங்கம் வகித்தவர். ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை சார்ந்து ஐந்து நூல்களை எழுதிய அனுபவம் மிக்கவர். 

நமக்கு உயர்கல்வி என்றாலே மருத்துவமும் பொறியியலும் மட்டும்தான்.
மற்ற துறைகள் எல்லாம் வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள் வேறு வழியின்றி ஒதுங்கும் இடமாக உள்ளது. 

இப்படி பெற்றோர்கள்,மாணவர்கள் கவனிக்காத பலதுறை படிப்புகள் விரிவாக இந்நூலில் கவனப்படுத்தப்பட்டுள்ளது. 

தனது நீண்ட அனுபவத்திலிருந்து ஒவ்வொரு துறையிலும் உள்ள வாய்ப்புகள், அத்துறை சார்ந்த படிப்புகள் அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள், நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகைகள் என முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறார் நூலாசிரியர். 

வேளாண்மை ,உணவு சார்ந்த படிப்புகள், சட்டம் , வைல்ட் லைஃப் படிப்புகள்,டிசைனிங், விண்வெளி துறையில் இருக்கும் படிப்புகள், பால் தொழில்நுட்பம், மெட்டாலர்ஜி, ரயில்வே துறை சார்ந்த படிப்புகள்,சுற்றுலா சார்ந்த படிப்புகள், சினிமா, பார்மசி எக்கனாமிக்ஸ், துணை மருத்துவம், மீன்வளம், வணிக்கல்வி, சைக்காலஜி புள்ளியியல்,மக்கள் தொகை, ஃபேஷன் டிசைனிங் என 56 அத்தியாயங்களில் தகவல் களஞ்சியங்களாக உள்ளது. இதில் உள்ள பல தகவல்கள் வேறு எங்கும் கேள்விப்படாதது. 

உயர் கல்வியில் சேர நடத்தப்படும் JAM,JGEEBILS,CUET,ICAR,GATE,JEE போன்ற பல தேர்வுகள் தொடர்பான விரிவான தகவல்களும் உள்ளது.

வெறும் துறை சார்ந்த வழிகாட்டி நூலாக மட்டுமல்லாமல் இந்நூலில் பேசப்படும் கல்வி சிக்கல்களும், தீர்வுகளும் முக்கியமானது. 

சான்றாக, தமிழகத்தில் காந்திகிராம பல்கலைக்கழகம் மற்றும் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகங்கள் இரண்டிலும் நமது மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். தற்போது ஒன்றிய அரசு நடத்தும் CUET தேர்வின் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாற்றி விட்டார்கள். இத்தேர்வில் நம் மாணவர்கள் கவனம் செலுத்தாத நிலையில் பிற மாநிலத்தவரே முற்றிலும் ஆக்கிரமிக்கும் நிலை வந்துவிட்டது. நாம் முன்னணி பல்கலைக்கழகங்கள் இரண்டை இழந்தோம்.

அத்துடன் மருத்துவ கவுன்சிலிங் வஞ்சிக்கப்படும் மாணவர்கள்,
மருத்துவப் படிப்பை நீட் தரமாக்குகிறதா?, 
கோச்சிங் சென்டர்...அக்கிரமங்களின் கதை,
நீட் தரத்தை குழி தோண்டி புதைக்கும் பர்சன்டையில் முடிவு,கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு தேர்வு, நீட் ரிசல்ட் நிறைய சந்தேகங்கள்... 
போன்ற தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் சமூக அக்கறையோடு கல்வியில் செயல்படும் அரசியலை அலசுகிறது.

நூலில் இடம் பெற்றுள்ள நாட்டின் பல முன்னோடி கல்வி நிறுவனங்களின் வரலாறு படிக்கும்போது பெருமிதம் தருவதாக உள்ளது. 

ஒவ்வொரு தலைப்பிலும் தரப்படும் புள்ளிவிவரங்களும் முக்கியமானவை, மதிப்பு மிக்கவை.

மாணவர்களுக்கு வாய்ப்புகளை சுட்டிக்காட்டி செல்வதோடு மட்டுமல்லாமல் தனது வழிகாட்டுதலால் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்வது மேலும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

மொத்தத்தில் இது மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும், பெற்றோர்களுக்கு தெளிவூட்டும், ஆசிரியர்களுக்கு புதிய வாசல்களை திறக்கும். அனைவரும் கைக்கொள்ள வேண்டிய தமிழின் முழுமையான உயர்கல்வி வழிகாட்டி நூல் இது.


Friday, April 4, 2025

எதுவும் இன்றி - டாக்டர்.சி .பழனிவேலு

 புறக்கணிப்புகள்தான் புதிய வாசல்களை திறக்கின்றன.

ஒரு மருத்துவரின் துணிவான தேடல்


எதுவும் இன்றி

டாக்டர்.சி .பழனிவேலு 

ஜெம் பவுண்டேஷன் வெளியீடு

04222 325100

******
எளிய மனிதன் நான்
என் வாழ்க்கை மிகச் சிறியது
 என் சாதனைகளும் சிறியவை
 ஆனால் இந்த வாழ்விலும் சாதனைகளிலும்
 நான் அடைந்த நிறைவு நிச்சயம் சிறியதல்ல.




                    நாமக்கல் மாவட்டம், மேல் சாத்தம்பூர் கிராமம். விவசாயம் சார்ந்த மக்கள். மழை பொய்த்து வறண்ட நிலத்தில் வாழ வாய்ப்பின்றி 1953 ல் மலேசியா செல்கிறது ஒரு குடும்பம்.  சென்ற இடத்திலும் நிம்மதி இல்லை. சொந்த மண்ணைத் துறந்து உறவினர்கள் நண்பர்களும் அருகில் இல்லாத சூழலில் துயரமாக கழிகிறது வாழ்க்கை. பெரியவர்களுக்கு ரப்பர் ,பாமாயில் தோட்டங்களில் கூலி வேலை. வீட்டில் எல்லோருக்கும் சமைத்துவிட்டு ஒரு தம்பி தங்கையையும் பராமரித்தவாறே அருகில் உள்ள பள்ளிக்கு சென்று ஆர்வத்தோடு படிக்கிறான் ஒரு சிறுவன். 

 மருத்துவராக வேண்டும் என்பதே அவனது கனவு. ஆனால் ஐந்தாம் வகுப்பு முடித்த நிலையில் தொடர்ந்து படிக்க இயலாத வறுமை சூழல். படிப்பை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கள்ளுக்கடையில் உதவியாளாக வேலைக்கு சேர்கிறான் சிறுவன். அதிக வேலை ;குறைந்த ஊதியம், வேலையை விட வேண்டியதாகிறது. பிறகு ரப்பர் தோட்டங்களில் மூன்று ஆண்டுகள் உழைத்தவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் துளிர்த்தபடியே உள்ளது‌. 

எனவே குடும்பம் மலேசியாவிலேயே இருக்க, அம்மாவுடன் 1966 ல் தாயகம் திரும்புகிறான் . மலேசியாவில் படித்த ஐந்தாம் வகுப்பு இங்கே செல்லத்தக்கதாக இல்லை. வயதும் 17 ஆகி விட்ட நிலையில் இங்குள்ள பள்ளிகள் அவனை சேர்க்க தயாராக இல்லை. அவனிடம் பணம் இல்லை. எந்த அடையாளமும் இல்லை, ஆனாலும் முடங்கிப் போய்விடவில்லை. கடுமையான வயல் வேலைகளுக்கு மத்தியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கெல்லாம் சென்று சேர்த்துக்கொள்ள வேண்டுகிறான். எல்லாப் பள்ளிகளும் தங்கள் கதவுகளை மூடிக்கொண்டன. அவர்களுக்குறிய விதியைத் தாண்டி உதவ யாரும் தயாரில்லை. 

 இறுதியில் வையாபுரி என்று ஆசிரியரின் கருணையால் நல்லூர் கவண்டிபாளையம் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து கொள்கிறான். பள்ளி நேரம் போக தோட்டத்து வேலை, ஆடு மாடுகளை பராமரிப்பது அருகில் உள்ள சந்தைகளுக்கு சென்று காய்கறிகளை விற்பனை செய்வது என்று கழிகிறது காலம். இடையில் மலேசிய கல்வித் தகுதியை மறைத்ததாக கூறி பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுத விடாமல் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறான் ‌. பல போராட்டங்களுக்குப் பிறகு பள்ளியில் சேர்ந்து மீண்டும் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறுகிறான்.

  இதுவரை நிராகரிப்பையும் பரிதவிப்பையும் மட்டுமே வாழ்க்கையில் சந்தித்து வந்த இளைஞன் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேதுராமன் அவர்கள் உதவியால் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி யு சி சேர்கிறான்.

 நகரத்து சூழல்,மேல்தட்டு மாணவர்கள், ஆங்கிலத்திலேயே நடக்கும் வகுப்புகள் எனவே 100% உழைப்பை செலுத்தி வெற்றி பெற முனைகிறான் . 
PUC யில் எல்லா பாடங்களிலும் சிறப்பு தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது சவாலாக உள்ளது. பெரும்பாலும் பெரிய இடத்து சிபாரிசு செய்பவர்களுக்கே இடம் என்ற நிலையில் இங்கும் அங்கும் அலைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்கிறது.மருத்துவராக வேண்டுமென்ற சிறு வயது கனவு பல்வேறு சவால்களுக்கிடையே நிறைவேறுகிறது. 
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பின்னாளில் உலகம் போற்றும் சாதனையாளராக வரப்போகும் மருத்துவர் சி.பழனிவேலு உருவாகிறார்.

மருத்துவ மாணவராக

                       புறக்கணிப்புகளையும் ஏமாற்றங்களையும் மட்டுமே சந்தித்தவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியேனும் முன்னுக்கு வந்து விட வேண்டும் என்று உழைக்கிறார் பழனிவேலு.மருத்துவக் கல்லூரியில் மாணவர் சங்க செயலாளராக பேராசிரியர்களுடன் நெருங்கி பழகி பல ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை செய்கிறார். மருத்துவர் ரங்கபாஷ்யம் , மருத்துவர் உமாபதி போன்ற முன்னோடிகளை வழிகாட்டியாகக் கொண்டு கடுமையாக உழைத்து தேர்ந்த மருத்துவராக உருவாகிறார்.

கல்லூரி இறுதி ஆண்டில் தங்கப் பதக்கமும், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் நினைவு பரிசையும் , நீரிழிவு மற்றும் வளர்ச்சிதை மாற்றம் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக பதக்கத்தையும் வென்று மிகச்சிறந்த மாணவன் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறார். துடிப்பான மருத்துவராக வெளியே வருகிறார்.

மருத்துவப் பணி 




                        சாதிக்கத் துடிக்கும் முயற்சியும், அடுத்தடுத்த நகர்வுளுக்கான தேடலும் மருத்துவர் பழனிவேலுவை தொடர்ந்து பல இடங்களுக்கு நகர்த்திச் செல்கிறது.மதுரையில் மருத்துவ மேற்படிப்பு எம் எஸ் முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி.

பின்னர் இரைப்பை மற்றும் குடல் நோய்கள் தொடர்பான அறுவை சிகிச்சை பயிற்சியை புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நிறைவு செய்கிறார். தொடர்ந்து எம் சிஹெச் மேற்படிப்பு முடித்து
இரைப்பை மற்றும் குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணராகிறார். கோவையில் மருத்துவ பணியை தொடங்குகிறார்.

அறுவை சிகிச்சையில் புதுமைகள் 

                        பித்தப்பை, குடல்வாழ் போன்ற பிரச்சனைகளுக்கு வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்வதே வழக்கமாக இருந்தது. இதனால் அறுவை சிகிச்சை முடிந்து பல நாட்களுக்கு நோயாளி இயல்புக்கு திரும்ப முடியாத நிலை இருக்கும். இந்நிலையில் சிறு துளைகள் வழியாக கேமராவையும் கருவிகளையும் செலுத்தி செய்யப்படும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைகள் மேல்நாடுகளில் அறிமுகமாகியிருந்த நிலையில் அதில் பயிற்சி பெற்று லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் இந்திய அளவில் முன்னணி மருத்துவராக உருவாகிறார்.

 கூடவே ஒரு மாத காலம் அமெரிக்கா சென்று முழுமையான பயிற்சி பெற்றதுடன் புதிய தொழில்நுட்பங்களையும் அறுவை சிகிச்சையில் புதிய செய்முறைகளையும் உருவாக்கி நமது திறமைகளை அவர்களுக்கு நிரூபித்துவிட்டு திரும்புகிறார்.

 இந்தியா முழுவதிலுமிருந்து டாக்டர்கள் கோவைக்கு வந்து இவரிடம் லேப்ராஸ்கோபி பயிற்சி பெற்று செல்கிறார்கள். நாள்தோறும் தாமும் புதிதாய் கற்று மற்றவர்களுக்கும் கற்பித்து அறுவை சிகிச்சைகளில் மூழ்கிப் போகிறார் மருத்துவர் பழனிவேலு. 

 உலகின் தலைசிறந்த லேப்ராஸ்கோபி நிபுணராகவும் இரைப்பை மற்றும் குடல் நோய் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் பல அறுவை சிகிச்சையில் புதுமைகளை புகுத்தியவராகவும் உள்ளார். வயிற்றில் ,உணவுக் குழாயில், இரைப்பை, கல்லீரல், கணையம் மற்றும் மலக்குடலில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை அகற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைகள் உலகிலேயே முதன்முறையாக இவரால் உருவாக்கப்பட்டவை. 

 இவர் உருவாக்கிய முறைகள் எளிமையானவை, குறைந்த கட்டணத்தில் செய்ய ஏற்றவை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள டாக்டர்கள் பின்பற்றக் கூடிய விதத்தில் உள்ளூர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டவை.இவற்றை டாக்டர் பழனிவேலு செயல்முறை என்றே பல நாட்டு மருத்துவர்களும் பின்பற்றுகின்றனர்.


 GEM -மருத்துவமனை
(Gastroenterology Medical centre and Hospital)


                                        தனது துறையில் மேலும் மேலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ள 1991 ல் சிறிய ஒரு மருத்துவமனையை தொடங்குகிறார். 
அதுவே ஆசியாவிலேயே முதன்முறையாக இரைப்பை மற்றும் குடல் நோய் சிகிச்சைக்கான பிரத்தியேக மையமான ல் ஜெம் மருத்துவமனையாக 2001 உருவெடுக்கிறது.

 இந்திய அளவில் 1000 லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளை முதலில் செய்த மருத்துவமனை என்ற பெயரை ஜெம் மருத்துவமனை பெற்றதுடன் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் தலைக்கோயில் என கோவை பெயர் பெற ஆரம்பித்தது.

இது பற்றி மருத்துவர் பழனிவேல் அவர்கள் கூறுவது,

லேப்ராஸ்கோபிக் சிகிச்சை என்பது உயர் தொழில் நுட்பமாகவும் அதிக செலவு பிடிப்பதாகவும் இருந்தது. வெளிநாடுகளில் விலை உயர்ந்த கருவிகளை பயன்படுத்தியே செய்தனர். நான் அவற்றை தவிர்த்து விட்டு சிக்கனமான முறையில் நம் மண்ணுக்கு ஏற்ற விதத்தில் இதை மாற்றியமைக்க நினைத்தேன். எளிய குடும்பங்களுக்கும் பயன்படும் சிகிச்சையாக இதை உருவாக்க ஆசைப்பட்டேன். இதனால் ஏராளமான அறுவை சிகிச்சைகளை செய்து உலக சாதனைகள் புரிந்தேன். 

உலகின் அத்தனை அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் நிறைந்ததாக ஜெம் மருத்துவமனை உள்ளது. முன்பெல்லாம் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமாகும் நவீன சிகிச்சை முறைகள் இந்தியாவுக்கு வர பல ஆண்டுகள் ஆகும். இப்போது உடனுக்குடன் ஜெம் மருத்துவமனை அறிமுகம் செய்கிறது.
 
நாங்கள் பெற்றிருக்கும் மருத்துவ அறிவை மற்ற டாக்டர்களும் பகிர்ந்துகொள்வதுடன் சமூகத்துக்கு தேவையான புதிய மருத்துவ தொழில்நுட்பங்களையும் அறுவை சிகிச்சை செயல்முறைகளை உருவாக்கி அர்ப்பணிப்புணர்வுடன் சேவை புரிகிறது
ஜெம் மருத்துவமனை.

முன்னேறிய நாடுகளில் உள்ளது போல இரைப்பை மற்றும் உணவுக் குழாய் சிகிச்சை, கல்லீரல் கணையம் மற்றும் பித்த நீர் குழாய் சிகிச்சை, பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிகிச்சை, உடல் மிகைபெறுமன் குறைப்பு அறுவை சிகிச்சை, கல்லீரல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, ஜீரண மண்டல மருத்துவ பிரிவு என ஒவ்வொன்றுக்கும் விரிவான தனித்துறை இருப்பதே மருத்துவமனையின் சிறப்பாகும்.

லேப்ராஸ்கோபி மிகைப்பருமன் குறைப்பு அறுவை சிகிச்சைக்காக ஜெம்மருத்துவமனை சர்வதேச ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உயர் சிகிச்சை மருத்துவமனை ஆகும்.

இப்போது டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பும் ஜெம் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.

250 படுக்கையில் கொண்ட மருத்துவமனையில் எளிய அடித்தட்டு மக்களுக்காக 15 படுக்கைகள் கொண்ட இலவச பொது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை சார்பில் கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.நோய் அறிகுறிகள் கண்டறியப்படும் ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. 

 அறுவை சிகிச்சைகளை நேரடியாக ஒளிபரப்பி செயல் விளக்கம் தரும் தொலை மருத்துவக் கல்வி வசதியும் ஜெம் மருத்துவமனையில் உள்ளது. இந்த இணைய வழி பயிற்சி மூலம் இங்கு நடைபெறும் அறுவை சிகிச்சைகளை உலகம் முழுக்க பல நாடுகளின் டாக்டர்கள் நேரலையில் பார்த்து பயிற்சி பெறுகிறார்கள் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய செய்தியாகும்.

கோவையை தொடர்ந்து தற்போது சென்னை,புதுச்சேரி, ஈரோடு, திருப்பூர், திருச்சூர் ஆகிய இடங்களிலும் ஜெம் மருத்துவமனையின் கிளைகள் உள்ளன.
லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி மற்றும் ரோபாட்டிக் அறுவை சிகிச்சைகள் இணைந்த சிறப்பு மையங்களாக இவை உள்ளன.

ஆராய்ச்சி & பயிற்சி மற்றும் நூல்கள்


                            உலக அளவில் முக்கிய மருத்துவ ஆராய்ச்சி ஆய்விதழ்களில் இவர் எழுதும் கட்டுரைகள் மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக அமைகிறது. 
லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் 20 க்கும் மேற்பட்ட புதிய முறைகளை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகள் தொடர்பான செயல்முறைகளை விவரித்து விரிவான விளக்கப் படங்களுடன் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். இவை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மருத்துவர்களுக்கு பாட நூலாக உள்ளது.

இவரது அறுவை சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சிகளும் மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. 

தொடர்ந்து அமெரிக்கா,இங்கிலாந்து, ஜெர்மன்,சீனா ,ரஷ்யா என முன்னணி நாடுகளுக்கும் சென்று புதுமையான பல லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகளை செய்து காட்டி அங்கிருக்கும் டாக்டர்களுக்கு பயிற்சி தருகிறார். உலக அளவில் அறியப்பட்ட இந்திய மருத்துவராக உள்ளார்.

உலகின் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக இருந்து மருத்துவ சிகிச்சைகளைக் கற்றுத் தருகிறார்.
திரைப்பட நடிகர்களுக்கு உள்ளது போல ஒரு மருத்துவருக்கு ரசிகர் மன்றம் இருப்பது இவருக்கு தான்.

சிறப்புகள் அங்கீகாரங்கள்





                           மருத்துவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருதினை இரண்டு முறை பெற்ற பெருமைக்குரியவர்.

 பிரிட்டனின் Royal College of Surgeons வழங்கும் Fellowship ad hominem என்ற அரிய கெளரவத்தைப் பெற்ற இந்திய மருத்துவர்.

 இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் செம்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. மலேசியா, பெரு என்று பல நாடுகளின் மருத்துவக்கல்வி நிலையங்கள் இந்த கௌரவத்தை அவருக்குத் தந்துள்ளன.புற்றுநோய் சிகிச்சையில் ஆற்றிய பங்களிப்புக்காக, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.

இந்தியாவின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

நல்லதொரு குடும்பம்

                        மருத்துவர் பழனிவேலுவின் சாதனைகளுக்கெல்லாம் பின்னணியில் அவரது குடும்பம் உள்ளது. வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தொடக்க காலத்தில் தொடர்ச்சியான பல நெருக்கடிகளிலும் மனம் கோணாமல் கணவருக்கு துணை நின்றவர் மனைவி ஜெயா. இப்போது ஜெம் மருத்துமனையை நிர்வகித்து வருகிறார். உடல் மிகை பருமன் குறைப்பு சிகிச்சை பிரிவின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வரும் மகன் பிரவீன் ராஜ், மற்றும் மருமகன் செந்தில்நாதன் என இவரது குடும்பமே மருத்துவமனையை தாங்கி நிற்கிறது. நெருக்கடியான மருத்துவப் பணிகளுக்கிடையேயும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்பதற்கு இவரது வாழ்க்கை முன்னுதாரணமானதாக உள்ளது.

எதுவும் இன்றி

                                             ஆர்வமும் தொடர் முயற்சியும் தேடலும் இருந்தால் ஒரு எளிய மனிதன் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் , சமூகத்திற்கு பணியாற்றிட முடியும் என்பதற்கு மருத்துவர் பழனிவேலு அவர்களின் வாழ்க்கை மிகச்சிறந்த சான்றாகும்.

இந்நூலை தன் வரலாற்று நூல் என்று சுருக்கிவிட முடியாது. நவீன மருத்துவ அறிவியலின், குறிப்பாக லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் வளர்ச்சியையும் சாத்தியங்களையும் விவரிக்கும் நூலாகவும் உள்ளது. GUTS என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 வெறும் பெருமைகளை மட்டும் பேசாமல் தனது வறுமையையும் பல இடங்களில் தான் பெற்ற சிபாரிசுகளையும், தனது சாதனைகளுக்கு காரணமான ஆசிரியர்களையும் மிக நேர்மையாக நன்றியோடு பதிவு செய்திருக்கிறார். அதுவே இத் தன்வரலாற்று நூலை உயிரோட்டமுள்ளதாக்குகிறது.

 சாதாரண வாசகனுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தரும் நூலிது. 
மருத்துவ மாணவர்களுக்கு பல புதிய வாசல்களை திறக்கும். மருத்துவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும் கையாளவும் தூண்டுகோலாக இருக்கும். அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும் இது.