Tuesday, April 14, 2026

கொடுங்காற்றில் ஒரு விளக்கு - லல்லாவின் கவிதைகள்

 


கொடுங்காற்றில் ஒரு விளக்கு

லல்லாவின் கவிதைகள்


தேர்வும் மொழிபெயர்ப்பும்

எம் கோபாலகிருஷ்ணன்




லல்லா 14 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த கலகக்கார பெண் துறவியும் கவிஞருமாவார்.


தற்போது கவிதை  என்று கூறப்படும் நல்லாவின் வாக்குகள் அவரால் தன் போக்கில் தனியாக அலைந்து கொண்டிருந்தபோது சொல்லப்பட்டவை.  அவை செவிவழியாக கேட்டு வாய்வழியாக  சொல்லப்பட்டு பல தலை முறைகளையும் கடந்து வந்ததுள்ளது. 


அந்த வாக்குகள் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய மொழியில் இருந்ததாலும் அன்றைக்கு வழக்கில் இருந்த பல நடைமுறைகளை விமர்சித்து  கேள்வி கேட்ட கலக குரல் என்பதாலும் பரவலாக கவனம் பெற்றது.


 இன்று லல்லாவின் வாய்மொழிகள் காஷ்மீர் முழுக்கவும் மந்திரங்களாகவும் பாடல்களாகவும் கவிதைகளாகவும் ஒலிக்கின்றன.


மனிதனின் இயல்பான ஆன்மீக உணர்வை சுயநல நோக்குடன் திசை திருப்பி அளிக்கும் எல்லாவிதமான அடக்குமுறை அமைப்புகளுக்கும் எதிராக குரல் கொடுத்ததுடன் தனது காலத்தில் நிலவிய சமத்துவமின்மை, அநீதி, மூடப்பழக்கங்கள் ஆகியவை கடுமையாக  விமர்சிப்பவை அவரது கவிதைகள். 


சமய மத நம்பிக்கைகளை கடந்து மனிதன் தன்னை அறிந்து கொள்வதே எல்லாருக்குமான மார்க்கமாக இருக்கும் என்ற மேன்மையான தத்துவத்தை காட்டுவதாலேயே லல்லாவின் கவிதைகள் அனைவருக்கும் நெருக்கமாக அமைகின்றன. 


கோபாலகிருஷ்ணன் அவர்களின் மொழிபெயர்ப்பு நவீன தமிழ்  கவிதையாக உணரச் செய்கிறது.

0000



குளிரை விரட்டமட்டும் 

உடுத்தினால் போதும் 

 பசியை அகற்ற மட்டும் 

  உண்டால் போதும் 

நினைவில் கொள் 

அண்டங்காக்கைகள் கொத்தித் தின்னவே

 இந்த உடம்பு 

,,,,


இந்த மேடையில் 

அவனைத் தேடு 

 அவன் பல வேடங்களை பூண்டிருக்கிறான் 

விரோதத்தையும் சினத்தையும் வெறுப்பையும் களைந்திடு 

கிடைப்பதை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள் 

அவனை நீ கண்டறிவாய் 

,,,,


பத்மாசனமிட்டு 

மூச்சை அடக்குவதால் மட்டும் 

 மெய்யை கண்டறிய முடியாது உன்னால் 

விடுதலைக்கான பாதைக்கு 

உன்னை விட்டு செல்லாது பகற்கனவுகள் 

வேண்டிய அளவு உப்பை 

நீ கலந்த போதும் 

 கடலாகி விடாது தண்ணீர்

,,,,


வேதங்களை கற்றுணர்ந்ததாக

 எண்ணுவோர்க்கு வாழ்த்துக்களை சொல்லுகிறேன் 

என் தலைப்பில் ஓடிக்கொண்டிருப்பது மாபெரும் வேதம் 

,,,,


மரத்தால் ஓர் வில் 

அதில் புல்லால் செய்த அம்பு

கைத்திறனில்லா தச்சனைக் கொண்டு

கட்டிய மாளிகை 

 நெரிசலான கடைத் தெருவில் 

பூட்டப்டாமல் ஒரு கடை 

 புனித நீரால் தூய்மை அடையா உடல்

நடக்கப் போவதை யார் அறிவார்?

,,,,


உண்ணாமல் பருகாமல் விரதமிருந்து

உடலை வருத்தாதே 

விரும்பியதை ருசித்து புசி 

 சத்தான உணவும் ஆடம்பர உடுப்பும்

எதற்கும் உதவாது 

 வேண்டியோர்க்கு உதவுதலைவிட

வழிபாடு வேறு இல்லை

,,,,


உன் கழுதையை இஷ்டம்போல திரிய விடாதே 

அடுத்தவரின் குங்குமப்பூ வயலை மேய்ந்துவிடும் 

 உனக்காக அடி உதைகளை வாங்க

அடுத்தவர் எவரும் முதுகைக் காட்ட மாட்டார்கள் 

,,,,


அது உன் அம்மணம் மறைத்தது

கடுங்குளிரிலிருந்து உன்னைக் காத்தது

 வெறும் நீரும் புல்லுமே

 அதன் ஆகாரம்

 உயிரற்ற கல்லுக்கு 

உயிருள்ள ஆடொன்றை 

வெட்டி பலியிட வேண்டுமென 

யார் சொன்னது உனக்கு?

,,,,


பூமியில் புதைந்திருக்கும் பாறைதான்

சாலைகளில் கற்களாகவும்

இளைப்பாற இருக்கையாகவும்

இறைவனின் கோயிலாகவும்

திருகையில் அரைக்கும் கல்லாகவும் உள்ளது 

இறைவனை அடைவதென்பது சுலபமல்ல

 இதிலிருக்கும் பாடத்தை கவனி.

,,,,


சிவன் குதிரை

விஷ்ணு கடிவாளம் 

பிரம்மன் சேணை வளையம்

யோகத்தின் ஒளிகொண்டு

 யோகியே அறிவான்

எந்தக் கடவுள் இந்த

 பரியிலேறுவான் என்று.

,,,,


காற்றில் நுழைந்து ககனத்தை அளந்து பத்து திசைகளிலும் அலைந்தேன் உடலின் ஒன்பது வாசல்களையும் அடைத்தேன் 

உள்ளேயும் வெளியேயும் வெற்றிடத்திலும் 

காணும் இடமெங்கும் கண்டேன் அவனையே.

0000


லல்லாவின் வாக்கு

கோபாலகிருஷ்ணனின் மொழிபெயர்பு

நூல்வனத்தின் தயாரிப்பு

எல்லாமே அழகு .



முழுமையாக வாசிக்க 


கொடுங்காற்றில் ஒரு விளக்கு 

லல்லாவின் கவிதைகள்

தேர்வும் மொழிபெயர்ப்பும் 

:எம் கோபாலகிருஷ்ணன் 

நூல்வனம் வெளியீடு 

9176549991





Friday, April 3, 2026

சேலம் - வரலாற்றின் அடையாளங்கள்


 

சேலம் - வரலாற்றின் அடையாளங்கள். 

ஜே.பர்னபாஸ்

சேலம் வரலாற்றுச் சங்கம் வெளியீடு 

9865976424

-------

2008 ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் 15 நாட்கள் பயணம் செய்தோம்.கல்கத்தா, சுந்தரவனக் காடுகள், டார்ஜிலிங் என முழுமையாக திட்டமிட்ட பயணம் .

ஆனால் இப்போது நினைவிலிருப்பது திட்டத்தில் இல்லாமல் தற்செயலாக கல்கத்தாவில் மேற்கொண்ட (walking tour) நடை உலாதான் .

உள்ளூர் வரலாறில் ஆர்வமுள்ள அலோக் சத்ரபதி என்பவர் பல ஆண்டுகளாக வார இறுதி நாட்களில் நடத்தும் நடைபயணம் அது.

 தண்ணீர் பாட்டில், தொப்பியோடு இளங்காலையில் 15 பேர் உற்சாகமாக நடையை தொடங்கினோம். எங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்.

சுதர் தெருவில் தொடங்கி மார்க்கெட்,இந்தியன் மியூசியம், பார்க் தெருவில் கல்லறைத் தோட்டம்,வில்லியம் கோட்டை, ஈடன் கார்டன் மைதானம், ஷாஹித் மினார்,திப்பு சுல்தான் மசூதி,ராஜ் பவன் என்று நடந்து ஹூப்ளி ஆற்றில் படகுப் பயணத்தோடு முடிந்தது.

வழியெங்கும் காலம் கடந்து வரலாற்றின் தடயங்களாக நிற்கும் கட்டிடங்கள், சிலைகள், கல்வெட்டுகள் கல்லறைகளை கவனப்படுத்தி விரிவான தகவல்களை அறிய முடிந்தது. ஓரிடத்தை அதன் வேரிலிருந்து அறிந்து கொண்ட அனுபவம்.

 சேலம் வரலாற்றின் அடையாளங்கள் நூலை வாசிக்கும் போது கல்கத்தாவின் மரபு நடை நினைவுக்கு வந்தது.

சேலம் மாநகரின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழுமையாக ஆராய்ந்து மாவட்டத்திலுள்ள முக்கிய வரலாற்று சின்னங்களையும் சேர்த்து 400 பக்கங்களில் தொகுத்திருக்கிறார் பர்னபாஸ் அவர்கள்.

 சில துளிகள்..

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் உள்ள செலநாடு என்ற குறிப்பே சேலம் பெயருக்கு ஆதாரமாக உள்ளது என்பதை அட்டை படமே வெளிப்படுத்துகிறது. 

1950 ஜனவரி 26 இந்தியா குடியரசான நாளில் இல் நிறுவப்பட்டஅசோகர் ஸ்தூபி.

1875 ல் கட்டப்பட்டு 150 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் CSI கிறிஸ்து நாதர் ஆலயம். அந்த வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பொருள்கள். 

1860 இல் உருவாக்கப்பட்ட பழைய சேலம் மாவட்ட ஆட்சியரகம் பற்றிய வரலாற்று செய்திகளும் அதில் இடம்பெற்ற நினைவு சின்னங்களும். தற்போதைய

மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள்.

1860இல் ராபர்ட் ப்ரூஸ் பூட் என்ற சர்வேயரால் சேலம் நகரில் திரிகோண நில அளவை தொடங்கப்பட்டது. அதனைக் குறிக்கும் ஒரு ராஜமுட்டு (Royal bench mark).

1757 இல் திப்புசுல்தான் கட்டிய சேலம் ஜாமியா மஸ்ஜித். இதில் திப்பு இருமுறை தொழுகை நடத்தியிருக்கிறார்.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜா ராணி தெப்பக்குளம்.

சேலத்தின் அடையாளமாக இருந்த மாடர்ன் தியேட்டரின் வரலாறு 

தாரமங்கலத்தில் உள்ள எண்கோண வடிவ குளம்.

மேட்டூர் நீர்த்தேக்கத்தால் அழிந்து போன கிராமங்கள், நந்தி சிலை, தேவாலயம் .

வரலாற்று சிறப்புமிக்க சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் ஆத்தூர் கோட்டை. 

பௌத்தம் செழித்திருந்தமைக்கு அடையாளமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் உள்ள வரலாற்றுத் தடயங்கள்.

தலைவெட்டி முனியப்பன் கோயிலாக மாற்றப்பட்ட புத்தர் சிலை.

சேலம் ஏற்காட்டில் பின்னணியில் இருந்த ஆங்கிலேயர்களின் வரலாறு.

சேலம் லண்டன் மிஷன் அமைப்பின் வரலாறு, சந்தித்த சோதனைகள், சவால்கள் சாதனைகள். புகழ்பெற்ற சேலம் லண்டன் மிஷன் உயர்நிலைப்பள்ளியின் வரலாறு.

போன்ற தகவல்கள் எங்கும் காணக் கிடைக்காதவை. 

 நூறாண்டுகளுக்கு முன்னால் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பகுதியிலிருந்து டவுனுக்கு செல்ல திருமணிமுத்தாற்றின் படித்துறையில் இறங்கி ஆற்றுநீரில் நடந்துதான் செல்ல வேண்டும் என்பதை நம்பமுடிகிறதா?

 இந்த சிரமத்தை போக்க குஜராத்தி வணிகரான திரு கிருஷ்ண தாஸ் தேவ் சந்த் சேட் என்பவர் 1923 இல் கட்டிய பாலம் தான் கஸ்தூரிபாய் காந்தி பாலம். இந்த செய்திகளை கொண்ட ஆங்கிலக் கல்வெட்டை தற்போதும் காணலாம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சேலம் ஜமீன்தாராக இருந்தவர் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் பிஷர் (1805-1867). அவருக்கு சேலம் பகுதியில் ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாம். ஏற்காட்டில் காப்பி தோட்டம் பருத்தி ,அவுரி , இண்டிகோ விளையும் தோட்டங்களும் உண்டு. அத்துடன் காபித்தூள் மற்றும் வெடியுப்பு தயாரிப்பு என்று தொழிலில் கொடி கட்டி பறந்திருக்கிறார். பெருஞ்செல்வம் ஈட்டிய அவர் சுற்றுப்பகுதி மக்கள் நலனுக்காக சாலை வசதி, கால்வாய்கள் வெட்டுவது, குடிநீருக்காக கிணறுகள் வெட்டி தருவது என்று பல நன்மைகளையும் செய்திருக்கிறார். இந்தியாவிலேயே ஒரு ஐரோப்பியர் ஜமீன்தாராக இருந்தது இவர்தான். 

இவர் தனது எஸ்டேட் மேனேஜராக இருந்த ஒரு இஸ்லாமியரின் அழகிய மகள் குருபீபீ மீது காதல்வயப்பட்டு மணம் புரிந்திருக்கிறார். குழந்தைகளை இங்கிலாந்துக்கு இங்கிலாந்தில் படிக்க வைத்திருக்கிறார்கள். 

 பிஷர் உயிரோடு இருக்கும்போதே தனது அன்பு மனைவி இறந்தால் இஸ்லாமிய முறைப்படி கல்லறை அமைக்க நிலமும் நிதியும் ஒதுக்கி வைத்திருந்தார்.1874 இல் மறைந்த குருபீபீ அம்மையாரின் கல்லறை சேலத்து தாஜ்மஹாலாக சேலம் அம்மாபேட்டையில் உள்ளது. சமயங்களைக் கடந்த இவர்களின் காதல் வாழ்க்கை வரலாற்றில் நிலைத்திருக்கிறது.

200 ஆண்டுகளுக்கு முன்பு கம்பீரமாக திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையை ஒட்டி அமைந்திருந்த சேலம் கோட்டையின் சுவடுகள் தற்போது எதுவும் இல்லை. ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், ஆங்கிலேயர்களும் கட்டியாண்ட கோட்டையை பர்னபாஸின் எழுத்து துல்லியமாக நமக்கு காட்டுகிறது.

சேலம் பகுதியில் கல்வி ,மருத்துவம் பரவலாக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள ஆளுமைகள் வரலாறும் நூலில் உள்ளது.

சேலத்தில் இருந்து தமிழ் தொண்டாற்றிய ஆங்கிலேயர்கள் மற்றும் நமது நாட்டவர்களை பற்றிய விரிவான விவரங்களும் உள்ளது.மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் 12 ஆண்டு காலம் சேலம் கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்திருக்கிறார். அதுவே அவரது தமிழ் பணியின் உச்சம் என்பதையும் அறிய முடிகிறது.

சேலத்து செம்மல் என்று அழைக்கப்படும் கே டி பால் 1876 ல் பிறந்தவர்.மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். அகில இந்திய ஒய்எம்சிஏ அமைப்பின் சிற்பியாகவும் கிராம மறு சீரமைப்பு திட்டத்தின் தந்தை எனவும் கருதப்படுகிறார்.தென்னிந்திய திருச்சபை சி எஸ் எப் ஐ என்ற மாபெரும் கிறிஸ்துவ தேவாலய அமைப்பு உருவாக காரணமாகவும் இருந்திருக்கிறார். நாடறிந்த தேசிய தலைவராக இருந்தவர் தற்போது ஒரு தெருவுக்கு பெயராக இருக்கிறார்.

இறை பணிக்காக வந்து வெயிலில் வதங்கி மக்களுக்கு சேவையாற்றிய மடிந்து சேலத்து கல்லறைகளில் துயிலும் பல ஆங்கிலேயர்களைப் பற்றிய குறிப்புகளை வாசிக்கும்போது மனம் கணக்கிறது.

நினைவு சின்னங்களைப்பற்றிய பற்றிய விரிவான தகவல்கள் படங்களோடு தரப்பட்டிருப்பது சிறப்பு. அவற்றை பாதுகாக்க தொடர்ந்து முயற்சித்து வரும் சேலம் வரலாற்றுச் சங்கத்தையும் , அதன் பொதுச்செயலாளர் ஜே.பர்னபாஸ் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எல்லா ஊரிலும் இதுபோன்ற வரலாற்று சின்னங்கள் இருக்கிறது. அவற்றை கவனித்து ஆவணப்படுத்த பர்னபாஸ்கள் இல்லை.

பாதுகாக்க வேண்டிய இந்த நூலை பரிசளித்த வரலாற்று ஆசிரியர் மதிப்பிற்குரிய இடைப்பாடி அமுதன் அவர்களுக்கு நன்றி !










Thursday, April 2, 2026

தீரா உலா கி.ச.திலீபன்

தீரா உலா

கி.ச.திலீபன்

நடுகல் பதிப்பகம் 

9865442435

-----



பயணங்களை விரும்பாதவர் யாருமில்லை. ஆனால் அது  எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. 

தனியாளாக 116 நாட்கள் 16000 கிலோமீட்டர் இந்தியாவை சுற்றிய திலீபன் அவர்களின் அனுபவங்களே  இந்நூல். அவரது பயணம்  நமது வழமையான திட்டமிட்ட சொகுசான பயணம் போலல்ல. இலக்கின்றி, பெரிய நிதி ஆதாரமின்றி, பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி தேசாந்திரியாக சுற்றித்திரிந்த அனுபவம்.


கன்னியாகுமரியில் தொடங்கும் இப்பயணம் குவஹாத்தி- -தவாங்-பும்லா பாஸ் -தேஸ்பூர் - கோஹிமா - இம்பால் - மோரே - காத்மாண்டு -போகரா - முக்திநாத் - காசி - ரிஷிகேஷ் - கேதார்நாத் -டேராடூன் - மசூரி - சிம்லா- சண்டிகர் - ஜம்மு - ஸ்ரீநகர் -லே லடாக் - மணாலி கசோல் - அமிர்தசரஸ் - அஜ்மீர் ஜெய்ப்பூர் -டையூ - டாமன் - கோவா - கோவை - எத்தனையோ நிலங்கள்,  விதவிதமான மனிதர்கள் அவர்களது கலாசாரம், வாழ்வியல் என விரிகிறது பயணம்.


செல்லும் இடத்தின் சிறப்புகளை, வரலாறுகளை அடுக்கிக் கொண்டே  போகாமல், தான் சந்தித்த மக்களை, கண்ணால்  கண்டு ரசித்தவற்றை மட்டும் விவரித்து சொல்வதே இந்நூலின் சிறப்பு. 


செல்லும் இடங்களில் புதுப்புது அனுபவங்கள். கோஹிமாவில் இறைச்சிக்காக விற்கப்படும் தவளைகள் ,மோரே நகரில் ருசித்த நாய்க்கறி, தற்செயலாய் முகநூலில் அறிமுகமான‌ தேஸ்பூர் இளம் பெண்ணின் ஒருதலைக்காதல், ஜன்னலோர இருக்கைக்காக கன்னத்தில் அடி வாங்கிய அனுபவம், ஸ்ரீநகரில்  மடிக்கணினியை திருட்டுக் கொடுத்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சோகம். 


 திலீபனுடன் நாமும் பயணித்த அனுபவம். நாமும் இதுபோல பயணம் கிளம்ப வேண்டும் என்ற உந்துதலை தரும் நூல்.

Tuesday, December 30, 2025

2025 நினைவில் நின்றவை - 1


 2025 ல் வாசித்த நூல்களில் நினைவில் நின்றவை 


காற்றைக் கேட்கிறவன் - கல்யாண்ஜி

கற்பது உலகளவு -
கல்வியாளர். தா.நெடுஞ்செழியன்

அ மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் 
 
பஞ்சம் ,படுகொலை, பேரழிவு : கம்யூனிசம் - அரவிந்தன்

காதல் சரி என்றால் சாதி தப்பு - பெருமாள் முருகன் 

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 5-
ஆசிரியர்.வீரமணி  

வெற்றிப்படிகள்-
- வானதி திருநாவுக்கரசு 

பறக்கும் முத்த ஸ்மைலிகள் -
 ஜி.கார்ல் மார்க்ஸ் 

சாதி ஒரு உரையாடல் - ஜெயமோகன்

சூரியனை அணிந்த ஒரு பெண்
- கே ஆர் மீரா

மகாத்மா ஜோதிராவ் புலே
 -தனஞ்செய் கீர்

மழையில் ஒரு நடை -
 மாதவ் காட்கில் 

படுபட்சி -டிலுக்சன் மோகன் 

குற்றமும் அநீதியும் - வி.சுதர்சன் 

கரும்பலகைக் கதைகள் -
தொகுப்பு இளம்பரிதி 

தமிழ் தேசியம்: ஏன் எதற்கு எப்படி? 
-தொகுப்பு :பாலமுரளி வர்மன்

தண்டிக்கப்படுகிறதா தமிழ்நாடு- மு.இராமநாதன் 

ஸ்டார்ட் யுகத்தில் வாழ்வது எப்படி- முகமது ரியாஸ் 

100 பெண்கள் 100 சிறுகதைகள்- தொகுப்பு : முனைவர் இரா பிரேமா 

நடுநிசி எல்லைகள்- சுசித்ரா விஜயன் 


பொலியோ பொலி -நாஞ்சில்நாடன்

எதுவும் இன்றி -டாக்டர் சி பழனிவேலு

 நேர்மை படும் பாடு -
ஞான ராஜசேகரன் 

ஷோபா சக்தி கதைகள் 

நாளை என்பது உன்னைக் காணும் நாள் -மனுஷ்யபுத்திரன்

உலக சினிமா - செழியன் 

உப்பு வண்டிக்காரன்- இமையம் 

கற்பது உலகளவு -கல்வியாளர்.தா.நெடுஞ்செழியன் 

விலங்கை உடைத்து -
கவிஞர் காசி ஆனந்தன் 

ஜீவன் லீலா - காகா காலேல்கர் 

இப்படித்தான் உருவானேன் -
 பழ கருப்பையா 

தும்பை - கண்மணி குணசேகரன்

மீண்டும் தலைப்புச் செய்திகள்+
 ராஜா வாசுதேவன் 

கொங்குக் குடியானவர் சமூகம் -
பிரண்டா பேக்

உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் (அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்) 

நிறம் மாற்றும் மண் -
இயகோகா சுப்பிரமணியம் 

ஒரு ஞானக்கிரகனின் பத்து முகங்கள் - சிவராம் காரந்த்


காந்தியக் கல்வி -ஜாகீர் ஹீசேன் அறிக்கை



Thursday, October 23, 2025

உன் யாதுமாகிய நான் (தமிழாக்க கவிதைகள்) க.மோகனரங்கன்


 

உன் யாதுமாகிய நான்

(தமிழாக்க கவிதைகள்)

க.மோகனரங்கன்

 தமிழினி வெளியீடு 



ரசனை

மஹ்மூத் தர்வீஷ்


ரயிலில் 

நமது இருக்கைகளை 

நாம் மாற்றிக்கொண்டோம்.

நீ ஜன்னலருகே 

இருக்க விரும்பினாய்; 

நானோ உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க விரும்பினேன்.


***


பரிசு

மௌலானா ரூமி


உனக்குத் தகுந்த

ஒரு பரிசைத் தேடிக் கொண்டுவருவதற்காக.

நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்று

உனக்குத் தெரியாது.

எதுவும் உகந்ததாகத் தோன்றவில்லை.

கனிமச் சுரங்கம் ஒன்றிற்குத் தங்கத்தையும்

 அல்லது

 கடலுக்கு நீரையும் சுமந்து வருவதால் என்ன பயன்?

என் இதயத்தையோ 

அல்லது ஆன்மாவையோ 

தருவதிலும் யாதொரு பயனுமில்லை! ஏனென்றால்

ஏற்கெனவே இவை உன்னிடம்தான் உள்ளன.

எனவே உனக்கொரு

 கண்ணாடியைக் கொண்டு வந்துள்ளேன்.

உன்னைப் பார்த்து

என்னை நினைவுகொள்.


***

பிம்பம்

சியோ-நி


ஓடும் நீரின் மேல்,

 தன் நிழலைத் துரத்துகிறது 

தட்டான் பூச்சி


***

ஒளியுவகை

கேன் யூசெல்


புராணத்தின்படி ஒவ்வொரு ஆளுக்கும் தனியே ஒரு சூரியன் இருக்கிறது.

நீங்கள் தினமும் காலையில் கண்விழிக்கையில் காண்பதல்ல;

அது,

உங்களுக்குப் பிரியமானவர்கள்

சிரிக்கும்போது பிறப்பது.


***


காட்சி

இசூமி ஷிகிபு


அவ்வளவு அவசரமாக 

எங்கே புறப்பட்டுப் போகிறாய்? 

எங்கு சென்றாலும் 

நீ காணப்போவது

அதே நிலவைத்தான்!


***


கீழ்ப்படிதல்

பீட்டர் செர்ச்சஸ்


உன் வலது கையை உயர்த்து என்றாள்.

வலது கையைத் உயர்த்தினேன்.

உன் இடது கையை தூக்கு என்றாள்.

இடது கையைத் தூக்கினேன்.

என் இரண்டு கைகளும் மேலே இருந்தன.

வலது கையை கீழே விடு என்றாள். கீழே விட்டேன்.

இடது கையை கீழே போடு என்றாள். நான் செய்தேன். 

உன் வலது கையைத் தூக்கு என்றாள். நான் கீழ்ப்படிந்தேன். 

உன் வலது கையை கீழே வை 

நான் செய்தேன். 

உன் இடது கையை உயர்த்தவும்.

 நான் அதை உயர்த்தினேன். 

உன் இடது கையை கீழே போடவும் நான் செய்தேன். 

நான் அங்கேயே நின்றேன்.

அமைதி.

இரண்டு கைகளையும் கீழே இறக்கி.

அவளுடைய கட்டளைக்காகக் காத்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து

 நான் பொறுமையிழந்து, 

அடுத்து என்ன என்றேன்.

இப்போது உத்தரவிடுவது உன் முறை என்றாள்.

சரி என்றவன் சொன்னேன்.

இப்போது என் வலது கையை உயர்த்தச் சொல்.


***


தெளிவு

வூ சின்


ஒரு பெயருடன்

ஒரு உருவத்தோடு எழுதப்பட்ட 

ஒரு கதையைக் கொண்டு நிகழ்த்தப்படும் 

வாழ்க்கை என்கிற இந்நாடகத்தில் ஒவ்வொரு உயிரும் 

காலத்தில் ஒரு துளி.

யாரும்l

தமக்கான பெயரை வடிவத்தை நாடகத்தின் கதையைத் தானே தேர்ந்தெடுக்கவில்லை.

இருப்பினும்,

ஒவ்வொருவரும் தனது விதியின் எஜமானர் தான்தான் என நம்புகிறார்கள்.

அவர்களின் பார்வை தெளிந்தவுடன்,

அவர்களும் சிரிப்பார்கள்.


***


போர்

சார்லஸ் சிமிக்


முதல் பனிப்பொழிவின் மாலையில் ஒரு பெண்ணின் நடுங்கும் விரல் பலியானவர்களின் பட்டியலில் கீழிறங்கிச் செல்கிறது. 

வீடு குளிர்ந்திருக்கிறது.

பட்டியல் நீளமாகவும் இருக்கிறது.

நம் அனைவரது பெயர்களும் 

அதில் சேர்க்கப்பட்டுள்ளன.


***


பேதம் ஏதுமில்லை

ஷெல் சில்வர்ஸ்டைன்


ஒரு வேர்க்கடலைபோலச் 

சிறியதாக இருப்பினும் 

ஒரு பூதத்தைப்போலப் 

பெரியதாகத் தோன்றினும் 

விளக்கை அணைத்ததும்

 நாம் அனைவரும்

 ஒரே அளவுடையவர்கள்தாம்.

சுல்தானைப் போன்ற பணக்காரராயினும் 

பூச்சியைப் போன்ற 

ஏழையாயினும்

 விளக்கை அணைத்ததும் 

நாம் அனைவரும் ஒரே மதிப்புடையவர்கள்தான்.

சிவப்பு கருப்பு அல்லது இளஞ்சிவப்பு மஞ்சள் அல்லது வெள்ளை நிறம் எதுவாயினும்

 விளக்கை அணைத்ததும் 

நாம் அனைவரும் 

ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறோம்

எனவே எல்லாவற்றையும் 

சரிசெய்ய வழி இருக்கும். 

விளக்கை அணைத்திட 

கடவுள்தான் 

தன் கையை நீட்ட வேண்டும்!


***


கனவு

சுவாங் சூ


நான் ஒரு பட்டாம்பூச்சியாக ஆகிவிட்டதாகக்

கனவு கண்டேன்,

வானத்தில் பறந்து திரிந்தேன்;

பிறகு விழித்தெழுந்தவன் ஆச்சரியப்படுகிறேன்:


இப்போது நான்

ஒரு பட்டாம்பூச்சி என்று கனவு கண்ட மனிதனா

அல்லது நான் ஒரு மனிதன் என்று

கனவு காண்கிற பட்டாம்பூச்சியா?


***


ரசமாற்றம்

ஓஷன் லுங்


"என்னைச் சந்திப்பதற்கு முன் நீ என்னவாக இருந்தாய்?

"நான் மூழ்கிக்கொண்டிருந்தேன் என்று நினைவு.

'இப்போது நீ என்னவாக இருக்கிறாய்?"

"தண்ணீராக."


***


உன்னை விட

மௌலானா ரூமி


எல்லாவற்றையும் சுவைத்தேன்.

உன்னை விடச் சிறந்தது எதையும்

 நான் காணவில்லை.

கடலுக்குள் மூழ்கித் தேடிய போதும் உனக்கு நிகரான ஒரு முத்தை நான் காணவில்லை.

எல்லா மூடிகளையும் திறந்தேன், ஆயிரம் ஜாடிகளில் இருந்து சுவைத்தேன்.

ஆயினும்

 என் உதடுகளை நனைத்து என் உள்ளத்தைத் தூண்டியதென்னவோ இதழமுதைத் தவிர வேறெதுவுமில்லை.


***


பொதுவான கதை

எல்.ஆர். நாஸ்ட்


உன் கதையைச் சொல்.

உரக்கக் கத்து.

எழுது.

தேவைப்பட்டால் கிசுகிசுக்கவும் செய்.

ஆனால் அதைச் சொல்.

சிலருக்கு அது புரியாது.

சிலர் அதை முற்றிலுமாக நிராகரிப்பார்கள்.

ஆனால் பலர் 

அதற்காக நன்றி கூறுவார்கள்.

அதன் பிறகு 

அந்த மாயாவினோதம் நடக்கும்.

ஒவ்வொன்றாகக் குரல்கள் 

ஒலிக்கத் தொடங்கும்

 'நானும் கூட' என்று கிசுகிசுப்பார்கள்.

உனது இனம் கூடும்.

நீ ஒருபோதும்

 மீண்டும் தனியாக உணரமாட்டாய்.


***


உன்னிலிருந்து உன்னிடம்

ஜைனப் ஹத்துன்

நான் ஒரு நீரூற்று.

நீயே என் நீர்.

நான் உன்னிலிருந்து

உன்னிடம் பாய்கிறேன்.

நான் ஒரு கண்.

நீயே என் ஒளி.

நான் உன்வசமிருந்து

உன்னைப் பார்க்கிறேன்.

நீ என் வலதுமல்ல

இடதுமில்லை.

நீயே என் கையும் காலும்.

நான் ஒரு பயணி.

நீயே என் பாதை.

நான் உன்னிலிருந்து

உன்னிடம் செல்கிறேன்.


***

எல்லாமுமாகிய உலகு

உமர் கய்யாம்


மக்கள்

சொர்க்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இங்கேயன்றி சொர்க்கம் வேறெங்குமில்லை.

மக்கள்

 நரகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் இங்கேயன்றி நரகம் எங்குமில்லை.

இனிவரும் மனிதர்களும் பேசுவார்கள் எதிர்வரும் வாழ்வை. 

ஆனால் அன்பே!

இங்கே அல்லாமல் 

வேறெங்கும் இல்லை 

வாழ்க்கை.


***


எனது விதி

சார்லஸ் புகோவ்ஸ்கி

நான் நரியைப் போல, வேட்டையாடப்படுபவர்களுடன் 

சேர்ந்து ஓடுகிறேன்.

இப் பூமியில் 

மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக நான் 

இல்லாமல் போனாலும், உயிரோடிருக்கும்

 அதிர்ஷ்டசாலி...

நிச்சயமாக.

நான்தான்.

-------+----

Saturday, October 18, 2025

படுபட்சி- டிலுக்ஸன் மோகன்



 படுபட்சி
                                                       தன் வரலாற்று நாவல் (Auto fiction)                                                டிலுக்ஸன் மோகன்





இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ளது செங்கலடி.                                                ஒரு பக்கம் இலங்கை ராணுவத்தின் முகாமும் மற்றொரு பக்கம் விடுதலைப் புலிகளும். எப்போதும் இடைவிடாது கேட்கும் வெடி சத்தத்தில் பிறந்து வளர்ந்தவர் மோகன். 

முதல் புஷ்பக விமானத்தை இராவணன்தான் உருவாக்கினான் என்று புராணக் கதை பேசி வரும் நாட்டில், இளம் வயதிலேயே மகனை விமானியாக்க வேண்டும் என்று விரும்பி வளர்த்த அப்பா. 

அந்த ஊக்கத்தால், "எனக்கு சிறிய வயதிலேயே இரண்டு விடயங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டன".

முதலாவது,                                                                                                                   "எக்காரணம் கொண்டும் போரிடும் எந்த தரப்பின் பக்கத்திலும் நான் சேரக்கூடாது".

 இரண்டாவது,                                                                                                                                "இடர், தடை, இழப்பு, வலி, வாதை என எது வந்தாலும் நான் அவற்றை எதிர்கொண்டும் கடந்தும் கண்டிப்பாக விமானப் பொறியியல் படிக்க வேண்டும். நான் ஒரு விமானத்தை உருவாக்க வேண்டும். இலங்கையில் இதுவரை ஒரு விமானம் கூட தயாரிக்கப் பட்டதில்லை. இலங்கையின் முதலாவது விமானத்தை நான் உருவாக்குவேன்", என்கிறார் மோகன்.

இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்க நினைத்த தமிழ் இளைஞனின் கனவையும், அக்கனவு சுக்குநூறாக உடைந்த வலியையும் பேசுகிறது படுபட்சி.

விடுதலைப் புலிகளுக்கு விமானம் தயாரித்ததாகக் கூறி அவனையும் அவனது குடும்பத்தையும் துடைத்தொழிக்க முயற்சிக்கிறது சிங்கள ராணுவம். பல ரணங்கள்,  கொடுமைகள்.

இலங்கையிலிருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, அகதியாகச் சூறாவளிக் காற்றில் சிறு துரும்பாய் அலைக்கழியும் துயர வாழ்க்கையை, இந்த தன் வரலாற்று நாவல் (Auto fiction) பேசுகிறது. துயரத்தாலும் இலட்சியத்தாலும் வதைகளாலும் நிரம்பிய, புனைவிலும் சொல்ல முடியாத வாழ்க்கை அது. 

அந்த சித்திரவதை நிறைந்த வாழ்க்கையை எப்படி விளக்கினாலும் மற்றவர்களால் ஓரளவுக்குத்தான் புரிந்துகொள்ள முடியும். அதை அனுபவித்து, உயிரோடிருப்பதே பெரிய விசயம்.

"தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக ஓர் இளைஞனின் கனவை, ஆசையை, ஒரு நாடு நிராகரித்ததைத் தாங்க முடியவில்லை. எனக்கு என்ன நடந்தது என்பதன் மூலம், தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்லும் முயற்சிதான் இது" என்கிறார் மோகன்.

உலகின் பூர்வகுடிகள் யார்?, இலங்கைத் தமிழர் - இஸ்லாமியப் பூசல்கள், இலட்சியக் கனல்களுக்கடையே துளிர்க்கும் காதல் என ஆயிரம் பக்கங்கள் விரித்து எழுத இந்நாவலில் இடமிருக்கிறது. இருப்பினும் கூர்மையான மொழியில் கச்சிதமான வடிவத்தில் நிறைவாக வந்திருக்கும் படைப்பு இது.

அடுத்தவர் வலியை உணர அவராகவே மாறினால்தான் முடியும்.        மோகனின் எழுத்து நம்மை மாற்றியிருக்கிறது.


 படுபட்சி

 டிலுக்ஸன் மோகன்

கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை.

விலை: ரூ. 250

தொடர்புக்கு: 94442 72500



Saturday, April 5, 2025

தீராப்பெருவெளி - த. பொன்னரசன்

தீராப்பெருவெளி 
(கவிதை தொகுப்பு)
த. பொன்னரசன்
மகிழினி பதிப்பகம் 

90951 67007 




உனக்கான காத்திருப்பில்
 வனாந்திரப் பெருமழையில்
 முழுவதும் நனைந்துவிட்டேன்
ஆங்கே தலைதுவட்ட
 தேவையோர் வண்ணத்துப்பூச்சி...


மிச்சமற்று எரித்துவிடு சகியே நம்
மீகாமம் சாகட்டும்

நடுநிசியில் நீரிறைக்கும் சப்தம்
 விழிகளில் தொங்கும்
 நிறைகுடங்களில் தளும்பும் மனம்...

உனக்கும் எனக்குமான ஆயத்தொலைவு - 
ஒரு கற்பனை நகர்தலுடன் சுழியமாகிறது...

என்னைத் திறப்பதற்கான கடவுச்சொல் 
என்னில் வேர்களாய் வியாபித்திருக்கும் நீயேயறிவாய்
 அந்த வேர்ச்சொல்
 உன் பெயர்ச்சொல் என்றறிய 
ஏனிந்த தாமதம்...

கையை விட்டு நழுவிய
 கண்ணாடிச் சில்லுகளிலிருந்து
 பிறப்பெடுக்கும் எனக்கான பிம்பத்தில்
ஓராயிரம் முறை
உன்னையே குவிக்கிறது என் விழி...

வாழ்வின் எந்த விசையும்
 என்னை ஈர்த்துவிடவில்லை...
எனினும் 
இவ்வாழ்வு தட்டுப்படுமென 
தடவுகிறதென் கைகள்..


திசை வேறு
 பயணம் ஒன்று 
மனதிற்கு
 மைல்கற்களில்லை...

பட்டால் தெரியும் என்பது
 பட்டுப்போன பின்னே தெரிகிறது...
மரணம் மனிதனைத் திருத்துகிறது...


இருகைகளின் இணைவினை
இவ்விருக்கை இன்னமும் ஈரப்படுத்தி வைத்திருக்கிறது...
என்றைக்காவது அப்பூங்கா 
செல்ல நேரிட்டால் 
ஒருநிமிடம் 
அவ்விருக்கையில் அமர்ந்துவிட்டுப்போ... 
அதன் ஆயுளாவது நீளும்....


வெளியில் உலவும் யாவரின் மூச்சையும் 
பருகாமல் உயிர்வளர்ப்பதெங்கனம்?
பதில் வாய்க்காத ஒற்றைக்கேள்விதான் 
அறம் எனப்படுவது யாதெனில்?...

 தாவர வாழ்வு 
தன்னறம் போதித்தது 
எனக்கு...


மலர்தலின்
ஆழம் கூடக்கூட
 அழுத்தத்தைக் கூட்டுகிறது கடல்...
ஆழம் கூடக்கூட
 அழுத்தத்தைத் தணிக்கிறது காதல்...

குத்திக்கிழியுறும்
யுத்தியறியும்
கத்திதனைப்
பொத்திப் பொலிவுற
வைத்தெந்தன்
புறமுதுகில் புகுத்திவிட்டாய் எனினும் 
எனக்குக் கண்கள் பிடரியிலே...

மந்தையில் சேராத என்னை
சந்தையில் சேர்த்ததில்
 என்ன விந்தையுள்ளது தந்தையே?...


ஆவி பறக்க காத்திருக்கிறேன் நான்
பனிக்கூழென பனியாவியாய் கவிந்திருக்கிறாய் நீ
தட்ப வெப்பம்
 வேறு வேறாகிலும் 
நமக்கான ஆவி 
ஒன்று போலத்தானே பரவிக் கூடுகிறது


காற்றின் கரைசலினூடே 
உன் உயிரை உமிழ்நீரோடு 
குழைத்து தூதனுப்பினாய்...
வண்ண ஒளிர்வினில் பறந்துவரும்
 சோப்புக்குமிழ்களாக மெல்லத்தரையிறங்கும்
 "காற்றிட்ட முட்டைகளை" நான் கைகளில் ஏந்துகையில் ..
உடைந்து சிதறிய குமிழ்களில்
 உன் ஈரம் பூசியிருந்த என்னுயிர்க்கு 
உரையெழுத உன்னைவிட்டால் யாருமில்லை...

Comments