Tuesday, December 30, 2025

2025 நினைவில் நின்றவை - 1


 2025 ல் வாசித்த நூல்களில் நினைவில் நின்றவை 


காற்றைக் கேட்கிறவன் - கல்யாண்ஜி

கற்பது உலகளவு -
கல்வியாளர். தா.நெடுஞ்செழியன்

அ மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் 
 
பஞ்சம் ,படுகொலை, பேரழிவு : கம்யூனிசம் - அரவிந்தன்

காதல் சரி என்றால் சாதி தப்பு - பெருமாள் முருகன் 

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 5-
ஆசிரியர்.வீரமணி  

வெற்றிப்படிகள்-
- வானதி திருநாவுக்கரசு 

பறக்கும் முத்த ஸ்மைலிகள் -
 ஜி.கார்ல் மார்க்ஸ் 

சாதி ஒரு உரையாடல் - ஜெயமோகன்

சூரியனை அணிந்த ஒரு பெண்
- கே ஆர் மீரா

மகாத்மா ஜோதிராவ் புலே
 -தனஞ்செய் கீர்

மழையில் ஒரு நடை -
 மாதவ் காட்கில் 

படுபட்சி -டிலுக்சன் மோகன் 

குற்றமும் அநீதியும் - வி.சுதர்சன் 

கரும்பலகைக் கதைகள் -
தொகுப்பு இளம்பரிதி 

தமிழ் தேசியம்: ஏன் எதற்கு எப்படி? 
-தொகுப்பு :பாலமுரளி வர்மன்

தண்டிக்கப்படுகிறதா தமிழ்நாடு- மு.இராமநாதன் 

ஸ்டார்ட் யுகத்தில் வாழ்வது எப்படி- முகமது ரியாஸ் 

100 பெண்கள் 100 சிறுகதைகள்- தொகுப்பு : முனைவர் இரா பிரேமா 

நடுநிசி எல்லைகள்- சுசித்ரா விஜயன் 


பொலியோ பொலி -நாஞ்சில்நாடன்

எதுவும் இன்றி -டாக்டர் சி பழனிவேலு

 நேர்மை படும் பாடு -
ஞான ராஜசேகரன் 

ஷோபா சக்தி கதைகள் 

நாளை என்பது உன்னைக் காணும் நாள் -மனுஷ்யபுத்திரன்

உலக சினிமா - செழியன் 

உப்பு வண்டிக்காரன்- இமையம் 

கற்பது உலகளவு -கல்வியாளர்.தா.நெடுஞ்செழியன் 

விலங்கை உடைத்து -
கவிஞர் காசி ஆனந்தன் 

ஜீவன் லீலா - காகா காலேல்கர் 

இப்படித்தான் உருவானேன் -
 பழ கருப்பையா 

தும்பை - கண்மணி குணசேகரன்

மீண்டும் தலைப்புச் செய்திகள்+
 ராஜா வாசுதேவன் 

கொங்குக் குடியானவர் சமூகம் -
பிரண்டா பேக்

உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் (அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்) 

நிறம் மாற்றும் மண் -
இயகோகா சுப்பிரமணியம் 

ஒரு ஞானக்கிரகனின் பத்து முகங்கள் - சிவராம் காரந்த்


காந்தியக் கல்வி -ஜாகீர் ஹீசேன் அறிக்கை



Thursday, October 23, 2025

உன் யாதுமாகிய நான் (தமிழாக்க கவிதைகள்) க.மோகனரங்கன்


 

உன் யாதுமாகிய நான்

(தமிழாக்க கவிதைகள்)

க.மோகனரங்கன்

 தமிழினி வெளியீடு 



ரசனை

மஹ்மூத் தர்வீஷ்


ரயிலில் 

நமது இருக்கைகளை 

நாம் மாற்றிக்கொண்டோம்.

நீ ஜன்னலருகே 

இருக்க விரும்பினாய்; 

நானோ உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க விரும்பினேன்.


***


பரிசு

மௌலானா ரூமி


உனக்குத் தகுந்த

ஒரு பரிசைத் தேடிக் கொண்டுவருவதற்காக.

நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்று

உனக்குத் தெரியாது.

எதுவும் உகந்ததாகத் தோன்றவில்லை.

கனிமச் சுரங்கம் ஒன்றிற்குத் தங்கத்தையும்

 அல்லது

 கடலுக்கு நீரையும் சுமந்து வருவதால் என்ன பயன்?

என் இதயத்தையோ 

அல்லது ஆன்மாவையோ 

தருவதிலும் யாதொரு பயனுமில்லை! ஏனென்றால்

ஏற்கெனவே இவை உன்னிடம்தான் உள்ளன.

எனவே உனக்கொரு

 கண்ணாடியைக் கொண்டு வந்துள்ளேன்.

உன்னைப் பார்த்து

என்னை நினைவுகொள்.


***

பிம்பம்

சியோ-நி


ஓடும் நீரின் மேல்,

 தன் நிழலைத் துரத்துகிறது 

தட்டான் பூச்சி


***

ஒளியுவகை

கேன் யூசெல்


புராணத்தின்படி ஒவ்வொரு ஆளுக்கும் தனியே ஒரு சூரியன் இருக்கிறது.

நீங்கள் தினமும் காலையில் கண்விழிக்கையில் காண்பதல்ல;

அது,

உங்களுக்குப் பிரியமானவர்கள்

சிரிக்கும்போது பிறப்பது.


***


காட்சி

இசூமி ஷிகிபு


அவ்வளவு அவசரமாக 

எங்கே புறப்பட்டுப் போகிறாய்? 

எங்கு சென்றாலும் 

நீ காணப்போவது

அதே நிலவைத்தான்!


***


கீழ்ப்படிதல்

பீட்டர் செர்ச்சஸ்


உன் வலது கையை உயர்த்து என்றாள்.

வலது கையைத் உயர்த்தினேன்.

உன் இடது கையை தூக்கு என்றாள்.

இடது கையைத் தூக்கினேன்.

என் இரண்டு கைகளும் மேலே இருந்தன.

வலது கையை கீழே விடு என்றாள். கீழே விட்டேன்.

இடது கையை கீழே போடு என்றாள். நான் செய்தேன். 

உன் வலது கையைத் தூக்கு என்றாள். நான் கீழ்ப்படிந்தேன். 

உன் வலது கையை கீழே வை 

நான் செய்தேன். 

உன் இடது கையை உயர்த்தவும்.

 நான் அதை உயர்த்தினேன். 

உன் இடது கையை கீழே போடவும் நான் செய்தேன். 

நான் அங்கேயே நின்றேன்.

அமைதி.

இரண்டு கைகளையும் கீழே இறக்கி.

அவளுடைய கட்டளைக்காகக் காத்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து

 நான் பொறுமையிழந்து, 

அடுத்து என்ன என்றேன்.

இப்போது உத்தரவிடுவது உன் முறை என்றாள்.

சரி என்றவன் சொன்னேன்.

இப்போது என் வலது கையை உயர்த்தச் சொல்.


***


தெளிவு

வூ சின்


ஒரு பெயருடன்

ஒரு உருவத்தோடு எழுதப்பட்ட 

ஒரு கதையைக் கொண்டு நிகழ்த்தப்படும் 

வாழ்க்கை என்கிற இந்நாடகத்தில் ஒவ்வொரு உயிரும் 

காலத்தில் ஒரு துளி.

யாரும்l

தமக்கான பெயரை வடிவத்தை நாடகத்தின் கதையைத் தானே தேர்ந்தெடுக்கவில்லை.

இருப்பினும்,

ஒவ்வொருவரும் தனது விதியின் எஜமானர் தான்தான் என நம்புகிறார்கள்.

அவர்களின் பார்வை தெளிந்தவுடன்,

அவர்களும் சிரிப்பார்கள்.


***


போர்

சார்லஸ் சிமிக்


முதல் பனிப்பொழிவின் மாலையில் ஒரு பெண்ணின் நடுங்கும் விரல் பலியானவர்களின் பட்டியலில் கீழிறங்கிச் செல்கிறது. 

வீடு குளிர்ந்திருக்கிறது.

பட்டியல் நீளமாகவும் இருக்கிறது.

நம் அனைவரது பெயர்களும் 

அதில் சேர்க்கப்பட்டுள்ளன.


***


பேதம் ஏதுமில்லை

ஷெல் சில்வர்ஸ்டைன்


ஒரு வேர்க்கடலைபோலச் 

சிறியதாக இருப்பினும் 

ஒரு பூதத்தைப்போலப் 

பெரியதாகத் தோன்றினும் 

விளக்கை அணைத்ததும்

 நாம் அனைவரும்

 ஒரே அளவுடையவர்கள்தாம்.

சுல்தானைப் போன்ற பணக்காரராயினும் 

பூச்சியைப் போன்ற 

ஏழையாயினும்

 விளக்கை அணைத்ததும் 

நாம் அனைவரும் ஒரே மதிப்புடையவர்கள்தான்.

சிவப்பு கருப்பு அல்லது இளஞ்சிவப்பு மஞ்சள் அல்லது வெள்ளை நிறம் எதுவாயினும்

 விளக்கை அணைத்ததும் 

நாம் அனைவரும் 

ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறோம்

எனவே எல்லாவற்றையும் 

சரிசெய்ய வழி இருக்கும். 

விளக்கை அணைத்திட 

கடவுள்தான் 

தன் கையை நீட்ட வேண்டும்!


***


கனவு

சுவாங் சூ


நான் ஒரு பட்டாம்பூச்சியாக ஆகிவிட்டதாகக்

கனவு கண்டேன்,

வானத்தில் பறந்து திரிந்தேன்;

பிறகு விழித்தெழுந்தவன் ஆச்சரியப்படுகிறேன்:


இப்போது நான்

ஒரு பட்டாம்பூச்சி என்று கனவு கண்ட மனிதனா

அல்லது நான் ஒரு மனிதன் என்று

கனவு காண்கிற பட்டாம்பூச்சியா?


***


ரசமாற்றம்

ஓஷன் லுங்


"என்னைச் சந்திப்பதற்கு முன் நீ என்னவாக இருந்தாய்?

"நான் மூழ்கிக்கொண்டிருந்தேன் என்று நினைவு.

'இப்போது நீ என்னவாக இருக்கிறாய்?"

"தண்ணீராக."


***


உன்னை விட

மௌலானா ரூமி


எல்லாவற்றையும் சுவைத்தேன்.

உன்னை விடச் சிறந்தது எதையும்

 நான் காணவில்லை.

கடலுக்குள் மூழ்கித் தேடிய போதும் உனக்கு நிகரான ஒரு முத்தை நான் காணவில்லை.

எல்லா மூடிகளையும் திறந்தேன், ஆயிரம் ஜாடிகளில் இருந்து சுவைத்தேன்.

ஆயினும்

 என் உதடுகளை நனைத்து என் உள்ளத்தைத் தூண்டியதென்னவோ இதழமுதைத் தவிர வேறெதுவுமில்லை.


***


பொதுவான கதை

எல்.ஆர். நாஸ்ட்


உன் கதையைச் சொல்.

உரக்கக் கத்து.

எழுது.

தேவைப்பட்டால் கிசுகிசுக்கவும் செய்.

ஆனால் அதைச் சொல்.

சிலருக்கு அது புரியாது.

சிலர் அதை முற்றிலுமாக நிராகரிப்பார்கள்.

ஆனால் பலர் 

அதற்காக நன்றி கூறுவார்கள்.

அதன் பிறகு 

அந்த மாயாவினோதம் நடக்கும்.

ஒவ்வொன்றாகக் குரல்கள் 

ஒலிக்கத் தொடங்கும்

 'நானும் கூட' என்று கிசுகிசுப்பார்கள்.

உனது இனம் கூடும்.

நீ ஒருபோதும்

 மீண்டும் தனியாக உணரமாட்டாய்.


***


உன்னிலிருந்து உன்னிடம்

ஜைனப் ஹத்துன்

நான் ஒரு நீரூற்று.

நீயே என் நீர்.

நான் உன்னிலிருந்து

உன்னிடம் பாய்கிறேன்.

நான் ஒரு கண்.

நீயே என் ஒளி.

நான் உன்வசமிருந்து

உன்னைப் பார்க்கிறேன்.

நீ என் வலதுமல்ல

இடதுமில்லை.

நீயே என் கையும் காலும்.

நான் ஒரு பயணி.

நீயே என் பாதை.

நான் உன்னிலிருந்து

உன்னிடம் செல்கிறேன்.


***

எல்லாமுமாகிய உலகு

உமர் கய்யாம்


மக்கள்

சொர்க்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இங்கேயன்றி சொர்க்கம் வேறெங்குமில்லை.

மக்கள்

 நரகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் இங்கேயன்றி நரகம் எங்குமில்லை.

இனிவரும் மனிதர்களும் பேசுவார்கள் எதிர்வரும் வாழ்வை. 

ஆனால் அன்பே!

இங்கே அல்லாமல் 

வேறெங்கும் இல்லை 

வாழ்க்கை.


***


எனது விதி

சார்லஸ் புகோவ்ஸ்கி

நான் நரியைப் போல, வேட்டையாடப்படுபவர்களுடன் 

சேர்ந்து ஓடுகிறேன்.

இப் பூமியில் 

மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக நான் 

இல்லாமல் போனாலும், உயிரோடிருக்கும்

 அதிர்ஷ்டசாலி...

நிச்சயமாக.

நான்தான்.

-------+----

Saturday, October 18, 2025

படுபட்சி- டிலுக்ஸன் மோகன்



 படுபட்சி
                                                       தன் வரலாற்று நாவல் (Auto fiction)                                                டிலுக்ஸன் மோகன்





இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ளது செங்கலடி.                                                ஒரு பக்கம் இலங்கை ராணுவத்தின் முகாமும் மற்றொரு பக்கம் விடுதலைப் புலிகளும். எப்போதும் இடைவிடாது கேட்கும் வெடி சத்தத்தில் பிறந்து வளர்ந்தவர் மோகன். 

முதல் புஷ்பக விமானத்தை இராவணன்தான் உருவாக்கினான் என்று புராணக் கதை பேசி வரும் நாட்டில், இளம் வயதிலேயே மகனை விமானியாக்க வேண்டும் என்று விரும்பி வளர்த்த அப்பா. 

அந்த ஊக்கத்தால், "எனக்கு சிறிய வயதிலேயே இரண்டு விடயங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டன".

முதலாவது,                                                                                                                   "எக்காரணம் கொண்டும் போரிடும் எந்த தரப்பின் பக்கத்திலும் நான் சேரக்கூடாது".

 இரண்டாவது,                                                                                                                                "இடர், தடை, இழப்பு, வலி, வாதை என எது வந்தாலும் நான் அவற்றை எதிர்கொண்டும் கடந்தும் கண்டிப்பாக விமானப் பொறியியல் படிக்க வேண்டும். நான் ஒரு விமானத்தை உருவாக்க வேண்டும். இலங்கையில் இதுவரை ஒரு விமானம் கூட தயாரிக்கப் பட்டதில்லை. இலங்கையின் முதலாவது விமானத்தை நான் உருவாக்குவேன்", என்கிறார் மோகன்.

இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்க நினைத்த தமிழ் இளைஞனின் கனவையும், அக்கனவு சுக்குநூறாக உடைந்த வலியையும் பேசுகிறது படுபட்சி.

விடுதலைப் புலிகளுக்கு விமானம் தயாரித்ததாகக் கூறி அவனையும் அவனது குடும்பத்தையும் துடைத்தொழிக்க முயற்சிக்கிறது சிங்கள ராணுவம். பல ரணங்கள்,  கொடுமைகள்.

இலங்கையிலிருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, அகதியாகச் சூறாவளிக் காற்றில் சிறு துரும்பாய் அலைக்கழியும் துயர வாழ்க்கையை, இந்த தன் வரலாற்று நாவல் (Auto fiction) பேசுகிறது. துயரத்தாலும் இலட்சியத்தாலும் வதைகளாலும் நிரம்பிய, புனைவிலும் சொல்ல முடியாத வாழ்க்கை அது. 

அந்த சித்திரவதை நிறைந்த வாழ்க்கையை எப்படி விளக்கினாலும் மற்றவர்களால் ஓரளவுக்குத்தான் புரிந்துகொள்ள முடியும். அதை அனுபவித்து, உயிரோடிருப்பதே பெரிய விசயம்.

"தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக ஓர் இளைஞனின் கனவை, ஆசையை, ஒரு நாடு நிராகரித்ததைத் தாங்க முடியவில்லை. எனக்கு என்ன நடந்தது என்பதன் மூலம், தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்லும் முயற்சிதான் இது" என்கிறார் மோகன்.

உலகின் பூர்வகுடிகள் யார்?, இலங்கைத் தமிழர் - இஸ்லாமியப் பூசல்கள், இலட்சியக் கனல்களுக்கடையே துளிர்க்கும் காதல் என ஆயிரம் பக்கங்கள் விரித்து எழுத இந்நாவலில் இடமிருக்கிறது. இருப்பினும் கூர்மையான மொழியில் கச்சிதமான வடிவத்தில் நிறைவாக வந்திருக்கும் படைப்பு இது.

அடுத்தவர் வலியை உணர அவராகவே மாறினால்தான் முடியும்.        மோகனின் எழுத்து நம்மை மாற்றியிருக்கிறது.


 படுபட்சி

 டிலுக்ஸன் மோகன்

கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை.

விலை: ரூ. 250

தொடர்புக்கு: 94442 72500



Saturday, April 5, 2025

தீராப்பெருவெளி - த. பொன்னரசன்

தீராப்பெருவெளி 
(கவிதை தொகுப்பு)
த. பொன்னரசன்
மகிழினி பதிப்பகம் 

90951 67007 




உனக்கான காத்திருப்பில்
 வனாந்திரப் பெருமழையில்
 முழுவதும் நனைந்துவிட்டேன்
ஆங்கே தலைதுவட்ட
 தேவையோர் வண்ணத்துப்பூச்சி...


மிச்சமற்று எரித்துவிடு சகியே நம்
மீகாமம் சாகட்டும்

நடுநிசியில் நீரிறைக்கும் சப்தம்
 விழிகளில் தொங்கும்
 நிறைகுடங்களில் தளும்பும் மனம்...

உனக்கும் எனக்குமான ஆயத்தொலைவு - 
ஒரு கற்பனை நகர்தலுடன் சுழியமாகிறது...

என்னைத் திறப்பதற்கான கடவுச்சொல் 
என்னில் வேர்களாய் வியாபித்திருக்கும் நீயேயறிவாய்
 அந்த வேர்ச்சொல்
 உன் பெயர்ச்சொல் என்றறிய 
ஏனிந்த தாமதம்...

கையை விட்டு நழுவிய
 கண்ணாடிச் சில்லுகளிலிருந்து
 பிறப்பெடுக்கும் எனக்கான பிம்பத்தில்
ஓராயிரம் முறை
உன்னையே குவிக்கிறது என் விழி...

வாழ்வின் எந்த விசையும்
 என்னை ஈர்த்துவிடவில்லை...
எனினும் 
இவ்வாழ்வு தட்டுப்படுமென 
தடவுகிறதென் கைகள்..


திசை வேறு
 பயணம் ஒன்று 
மனதிற்கு
 மைல்கற்களில்லை...

பட்டால் தெரியும் என்பது
 பட்டுப்போன பின்னே தெரிகிறது...
மரணம் மனிதனைத் திருத்துகிறது...


இருகைகளின் இணைவினை
இவ்விருக்கை இன்னமும் ஈரப்படுத்தி வைத்திருக்கிறது...
என்றைக்காவது அப்பூங்கா 
செல்ல நேரிட்டால் 
ஒருநிமிடம் 
அவ்விருக்கையில் அமர்ந்துவிட்டுப்போ... 
அதன் ஆயுளாவது நீளும்....


வெளியில் உலவும் யாவரின் மூச்சையும் 
பருகாமல் உயிர்வளர்ப்பதெங்கனம்?
பதில் வாய்க்காத ஒற்றைக்கேள்விதான் 
அறம் எனப்படுவது யாதெனில்?...

 தாவர வாழ்வு 
தன்னறம் போதித்தது 
எனக்கு...


மலர்தலின்
ஆழம் கூடக்கூட
 அழுத்தத்தைக் கூட்டுகிறது கடல்...
ஆழம் கூடக்கூட
 அழுத்தத்தைத் தணிக்கிறது காதல்...

குத்திக்கிழியுறும்
யுத்தியறியும்
கத்திதனைப்
பொத்திப் பொலிவுற
வைத்தெந்தன்
புறமுதுகில் புகுத்திவிட்டாய் எனினும் 
எனக்குக் கண்கள் பிடரியிலே...

மந்தையில் சேராத என்னை
சந்தையில் சேர்த்ததில்
 என்ன விந்தையுள்ளது தந்தையே?...


ஆவி பறக்க காத்திருக்கிறேன் நான்
பனிக்கூழென பனியாவியாய் கவிந்திருக்கிறாய் நீ
தட்ப வெப்பம்
 வேறு வேறாகிலும் 
நமக்கான ஆவி 
ஒன்று போலத்தானே பரவிக் கூடுகிறது


காற்றின் கரைசலினூடே 
உன் உயிரை உமிழ்நீரோடு 
குழைத்து தூதனுப்பினாய்...
வண்ண ஒளிர்வினில் பறந்துவரும்
 சோப்புக்குமிழ்களாக மெல்லத்தரையிறங்கும்
 "காற்றிட்ட முட்டைகளை" நான் கைகளில் ஏந்துகையில் ..
உடைந்து சிதறிய குமிழ்களில்
 உன் ஈரம் பூசியிருந்த என்னுயிர்க்கு 
உரையெழுத உன்னைவிட்டால் யாருமில்லை...

Comments





வீரான்குட்டி கவிதைகள்

வீரான்குட்டி கவிதைகள் 

 மலையாளத்திலிருந்து தமிழில்:சுஜா 

தன்னறம் வெளியீடு

9843870059



கேள்:

கல்லிடம் கேள்
 எவ்வளவு காத்திருந்து ரத்தினமாகியதென நீர்த்துளியிடம் விசாரி
 எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென 
உதடுகள் இருந்திருந்தால் 
அவை சொல்லியிருக்கும் 
அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்று.
*

குறைந்து குறைந்து

காணும் முன்பு 
எத்தனை பெரியவராய் இருந்தோம் பரஸ்பரம் நாம்!
கண்டுகழித்ததும் சிறிதானோம் 
பேசத் தொடங்கியபோது அற்பமானோம் இனி ஒன்றாக நடக்கத் தொடங்கினால் குறைந்து குறைந்து 
இருக்கிறோம் என்றே 
சொல்ல முடியாத அளவுக்கு 
முழுதுமாய்த் தீர்ந்துவிடுவோமோ
 நாம் ஒருவருக்கு ஒருவர்?
கடவுள் காணக் கிடைக்காதது சாலவும் நன்றல்லவா?
*


ரூமிக்கு

காயங்கள் பட்டாலென்ன 
உதடுகளுடன் எப்போதும் வாசிக்க முடிந்ததல்லவா?
புல்லாங்குழல் பாடுகிறது.
*

சொல்

சொல்
இரண்டுபேர் 
காதலிக்கத் தொடங்கும்போது
அவர்களை மட்டுமாக்கி
 சுற்றியுள்ள உலகம் 
சட்டென்று எங்கே போய்த் தொலைகிறது?
*

யாரும் காணாதவாறு

யாரும் காணாதவாறு 
நீ செய்து கொண்டிருப்பது அனைத்தும் தெரியும் எனக்கு
யாரும் கேட்க முடியாத மொழியில் 
அதைச் சொல்ல முடியாததன்
 வருத்தம்தான் எனக்கு
*

வீணாக

சுயரூபம்
நீட்டியும்
குறுக்கியும் 
ஆடும் நிழலின்
விளையாட்டை
அற்பமாக
நினைக்க வேண்டாம்.
எப்போதும்
ஒருவனின்
கீழேயே
இருக்க வேண்டி வந்ததன்
துக்கத்தை
மறப்பதற்கு
அது
முயற்சி செய்து கொண்டிருக்கலாம்
*

நமக்கிடையில் இந்த மரம்

நமக்கிடையில் இருக்கும் இந்த மரம் ஊமையென்றுதானே எண்ணுகிறாய்?
கூர்ந்து கேள் 
பிரியப்பட்ட யாருடனோ 
அது பூக்களால் பேசுகிறது 
காய்களால் வாக்குறுதியளிக்கிறது
 அந்தத் தளிரிலைச் சிவப்பு 
வீணென்றா நினைக்கிறாய்? 
அப்படி அந்த மரம் ஊமையென்றால் 
காதலே அதற்குப் பழியேற்கட்டும்.
*


ஒவ்வோர் இலையும்

நாம் இங்கிருந்துகொண்டு 
பூமியின் எல்லா மரங்களிலும்
 எத்தனை இலைகள் 
என்று எண்ணத் தொடங்குகிறோம் இலைகள் எவ்விதத்திலும் ஒத்துழைப்பதில்லை 
அவற்றிற்கு அதொன்றும் முக்கியமில்லை.
ஒவ்வோர் இலையும் 
அதனதன் அதீத தனிமையில், உதிரும்போதுதான் நாமதைத் தெரிந்துகொள்கிறோம் அவ்வளவுதான்.
*

கலந்துவிட்ட வெளிச்சங்கள்

முன்பொரு முறை
நாம்
ஒருவர்க்கொருவர் 
பரிசளித்துக்கொண்ட விளக்குகளில் உன்னுடையது, என்னுடையது என 
வேர்பிரித்தெடுக்கச் சாத்தியமில்லை 
பிரியும்போது
எனில்
அவற்றின் ஒன்றாய்க் கலந்துவிட்ட வெளிச்சத்தை 
எப்படி வேறுவேறாக்குவது? கொண்டுபோவது?
*

அறியாமல்

நேரம் மெல்ல விடிவது காண 
காத்து விழித்திருந்தீர்கள் 
காண முடியவில்லை 
நேரம் விடிந்துவிட்டது

பூ மலர்வதைக் காண 
கண் இமைக்காமல் இருந்தீர்கள். 
காணவில்லை 
பூ மலர்ந்துவிட்டது.

இப்படியே போனால் 
நீங்கள் கண்ணில் எண்ணெய் ஊற்றி பார்த்துக்கொண்டேதான் இருக்கப்போகிறீர்கள். 
அதனிடையில்
 எப்போதாவது 
உங்களுக்குத் தெரியாமல் நானும் இல்லாமல் போய்விடுவேன்.
*


சுவாதீனம்

செத்தவரை
கொண்டுபோகும் கூச்சல்
எங்களை
சட்டென்று பெரியவராக்கியது

ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம்
என்றொரு குரல்
சைக்கிள் பெல்லோடு
எதிரே வந்து
எங்களைச் சின்னஞ்சிறு
குழந்தைகளாக்கும் வரை.
*

வெள்ளைக் கொக்கின் படம்

மேகத்தில்
யானையின்
முயலின்
வடிவங்களைக் கற்பனை செய்வேன்.

சில நேரங்களில் குருவியை
வீட்டின் அருகில் உள்ள
வயல் கரையில்
ஆழத்தை உற்று நோக்கியபடி
அமர்ந்திருக்கும் கொக்கின் படத்தை வைத்திருந்தது குளம்.

கோடையில் குளம் வற்றியது பிறகு கொக்கைக் காணவேயில்லை அந்தப் படத்திற்கு என்ன ஆகியிருக்கும்?

இப்போது
சில நேரங்களில்
மேகத்தில்
என்னால் பார்க்க முடிகிறது
வெள்ளைக் கொக்கின் படம்.
*


நேர்மை படும் பாடு - ஞான ராஜசேகரன்

 நேர்மை படும் பாடு

ஞான ராஜசேகரன் 
டிஸ்கவரி புக் பேலஸ்.



ஞான ராஜசேகரன் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அலுவலர், கலை இலக்கிய ஆர்வலர் ,திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.

அவர் தனது அரசுப் பணி அனுபவங்களை விவரிக்கும் 32 சுவையான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். 

நூலின் தலைப்பே சொல்வது போல தனது பணிக்காலத்தில் இயன்றவரை நேர்மையாக கடமையை செய்தவர் ஞானசேகரன். அவ்வப்போது எதிர்கொண்ட சவால்களையும் நெருக்கடிகளையும் சுவைபட கூறி இருக்கிறார். அதே நேரத்தில்
நேர்மை என்ற பெயரில் தேவையற்ற கெடுபிடிகளை செய்யும் மனிதாபிமானமற்ற அலுவலர்களின் செயல்பாடுகளையும் விமர்சிக்கிறார்.

கீழ்கண்ட வரிகளே நூலாசிரியரின் ஆளுமையை நிரூபிப்பதாக உள்ளது.
 
"ஐஏஎஸ் தந்த நேர்மை திமிரை வெளிகாட்டி அரசியல்வாதிகளுடன் ஆன உறவை நாசமாக்கிக் கொள்வதால் மக்களுக்கு நமக்கோ யாதொரு பலனும் இல்லை.

என் சர்வீஸில் பலமுறை அரசியல் தலைவர்கள் சிபாரிசு செய்ய லிஸ்ட்டோடு என்னிடம் வந்திருக்கிறார்கள்.அவர்கள் எப்போதும் தொண்டர்கள் கூட்டத்துடன்தான் வருவது வழக்கம். சிபாரிசு செய்ய வரும் அரசியல் தலைவரின் கவலை எல்லாம் அவர்கள் கொண்டு வருகிற சிபாரிசுகளை பற்றி இருப்பதில்லை, தொண்டர்களின் முன் அதிகாரி தன்னை கௌரவமாக நடத்த வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் பிரதான பிரச்சனையாக இருக்கும். இது போன்ற சமயங்களில் தலைவர்களை அன்புடன் வரவேற்று நன்றாக உபசரித்து நான் என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன் என்று சொல்லி அவர்கள் தரும் லிஸ்டை வாங்கிக்கொள்வேன். அவர்களும் மன நிறைவோடு சென்று விடுவார்கள். அவர்கள் தந்த லிஸ்ட்டை நான் செயல்படுத்தியதே இல்லை. அவர்களும் அதைப்பற்றி விசாரிக்க திரும்ப வந்ததும் இல்லை" 

கேரளா மாநிலத்தில் ஆட்சிப் பணி அதிகாரியான இவருக்கு மெச்சத்தகுந்த நேர்மையான முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள் . இந்நூல் வழியாக அறியப்படும் கருணாகரன்,உமன் சாண்டி, ஏகே அந்தோணி ஆகிய முதல்வர்கள் இப்படியும் அரசியல் தலைவர்கள் இம்மண்ணில் இருக்கிறார்களா என்று வியக்க வைக்கிறார்கள்.

கேரள மாநிலம் கல்வி அறிவும் அரசியல் முதிர்ச்சியும் நிறைந்த சமூகம். 
திருச்சூர் ,பாலா மாவட்ட கலெக்டர், திரைப்பட தணிக்கை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தது சவாலானது.

சான்றாக சில அனுபவங்கள்..
 
மாவட்ட ஆட்சியராக ராஜசேகரன் உள்ளார். பாரதப் பிரதமர் திருச்சூர் வந்திருக்கிறார்.உடன் அவரது குடும்பமும் . ஆட்சியர் தலைமையில் பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் முனைப்போடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் டெல்லி செல்ல தயாரான நிலையில் காஞ்சி சங்கரச்சாரியார் மரணம் அடைந்த செய்தி வருகிறது. பிரதமர் காஞ்சிபுரம் செல்ல நினைக்கிறார். துக்க நிகழ்ச்சிக்கு செல்ல நூல் புடவை இல்லையே என்ற கவலை பிரதமரின் மனைவிக்கு. நகரில் உள்ள பெரிய கடை நள்ளிரவு திறக்க செய்யப்படுகிறது. பாதுகாவலர்களள் சூழ மணி நேரம் செலவிட்டு திருப்தியாக திரும்பி வருகிறார். பாதுகாவலர்கள் சொன்ன செய்திதான் அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு நூல் புடவை கூட எடுக்கவில்லை. விலை உயர்ந்த 5 பட்டுப்புடவைகளை மட்டுமே வாங்கிக் கொண்டார், என்பதுதான் அது. அரசு செலவு தான் என்பதை தனியாக சொல்ல வேண்டியது இல்லை.

இந்திய அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது. கூட்ட அரங்கின் முன் போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் தயாராகின்றன. கேரளாவில் இது வாடிக்கை . தேசிய அளவில் நடக்கும் கூட்ட அரங்கத்துக்கு முன் போராட்டத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் ஆட்சியர்.

கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் முந்திய நாள் மதியமே வந்து ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள் .அவர்களிடம் இன்று மாலையே கூட்டத்தை நடத்தி விட்டால் என்ன என்று ஆலோசிக்கிறார். வந்தவர்களுக்கு நல்ல யோசனையாகப்படுகிறது. மறுநாள் கடவுளின் தேசமான கேரளாவில் சுற்றுலா சென்று திரும்பலாம் என்ற எண்ணத்தில் அனைவரும் பச்சை கொடி காட்டுகிறார்கள். இரவே கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மறுநாள் போராட்டக்காரர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்வரான நூலாசிரியர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் செயலாளராக இருக்கிறார் .மணிப்பூர் மாநிலத்தின் புகழ்பெற்ற கண்ணையா குழுவினரின் மூன்று நாள் நாடக நிகழ்வை திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்கிறார்.
அனுமதி இலவசம்.

 முதல் நாள் நாடகம் துவங்கிய நிலையில் 20 பேர் மட்டுமே பார்வையாளர்கள். 250 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஹாலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிறைய விளம்பரமும் செலவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடகத்தை ரத்து செய்து விடலாமா என்று யோசிக்கிறார். திடீரென்று ஒரு மாற்று சிந்தனை.

மறுநாள் நாடகம் பார்க்க கட்டணம், முன்பதிவு செய்ய வழிமுறைகளையும் செய்தித்தாளில் விளம்பரம் செய்கிறார். 

உடனே அரசியல்வாதிகள்,உயர் அதிகாரிகளிடமிருந்து விஐபி பாஸ் கேட்டு தொடர்ந்து கோரிக்கைகள் வருகிறது. மறுநாள் மாலை அரங்கம் நிறைந்ததால் நின்று கொண்டே நாடகம் பார்க்க வேண்டிய சூழல். 

 அதிகாரத்தை பயன்படுத்தி இலவச பாஸோடு வந்தவர்கள் தான் அனைவரும். டிக்கெட் வாங்கி வந்தவர்கள் ஒருவரும் இல்லை என்பதை வேடிக்கை.

  ஆட்சி பகுதியில் உள்ள ஒரு கிராமத்து தேவி திருவிழா. திருவிழாவின் இறுதி நாளில் நீண்ட ஊர்வலம் புறப்பட்டு அப்பகுதியில் உள்ள பெரிய மசூதியின் வழியாக செல்லும். காலங்காலமாக அமைதியாக நடந்து வந்த இந்நடைமுறை சமீபடத்திய ஆண்டுகளில் பதட்டமான சூழலிலை உருவாக்குகிறது. மசூதியில் பாங்கு ஓதும் நேரத்தில் ஊர்வலம் செல்பவர்கள் கூச்சலிடுவதும் கல்வீச்சும் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர் திருவிழா நடத்துவது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இம்முறை ஆட்சியாளர் நம்மவர். பிரச்சனை இல்லாமல் ஊர்வலத்தை நடத்தி முடிக்க விரிவான ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தாலும் பதற்றமான சூழல் உள்ளது. இவை எதுவும் இல்லாமல் எளிமையாக எப்படி பிரச்சனையை தவிர்த்தார் என்பது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.   
அதிகாரத்தையும் போலீஸ் படையையும் நம்பியே நிர்வாகம் செய்ய நினைப்பவர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் வழிகாட்டியாக அமையும்.

அரசு அதிகாரிகளுக்கு இந்நூல் வழிகாட்டும். பொதுமக்களுக்கு அரசு எந்திரத்தின்மேல் நம்பிக்கையையும் மரியாதையையும் விதைக்கும். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

நிறைகுளம் - பெ.மகேந்திரன்

நிறைகுளம் - நாவல்

 பெ.மகேந்திரன் 

மின்னங்காடி பதிப்பகம் 

78240 49160


பேய்ந்து விளையுது மலையாள பூமி 

பாய்ந்து விளையுது தஞ்சாவூர் பூமி

 காய்ந்து விளையுது கரிசல் பூமி.

நான் சிறுவனாக இருக்கும்போது பொடிமட்டை என்ற பெரியவர் ஊரில் இருந்தார். அவர் இயற்பெயர் யாருக்கும் தெரியாது ‌.
நல்ல பெரும்பாடி ஆள். எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பார். பாக்கெட் நிறைய காகிதங்களும் ஒரு முரட்டு பேனாவும்.  கையில் காபிதூள் நிறத்தில் ஒரு தோல்பையும் அவரது அடையாளம்.

நான் இல்லாவிட்டால் மொரப்பூருக்கு ரயில் வந்திருக்காது, நான் சொல்லி தான் அரூர் சர்க்கரை ஆலை வந்தது என்பார். வாணியாறு அணை கட்ட மனு எழுதி இருக்கிறேன் என்பார். அன்றாடம் மனு எழுதுவதே அவரது வேலை. 

கரிசல்காடு படைப்பாளிகள் விளையும் மண். அம்மக்களின் கனவுகளை, எதிர்பார்ப்புகளை காலந்தோறும் படைப்புகளாக எழுதி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் நிறைகுளம் கிராமம்.
கரிசல் மண்ணின் சம்சாரிகள் வானம் பார்த்த பூமியில் நம்பிக்கையை மட்டுமே முதலீடாக கொண்டு விவசாயம் செய்கிறார்கள். வானம் பார்த்த பூமியில் விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீருக்கே போராடும் நிலை உள்ளது ‌

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் வழியாக அருப்புக்கோட்டை, சாயல்குடி, கடலாடி வரையுள்ள பகுதிகளுக்கு நீர் பாசனத்திற்காகவும் குடிநீர் வசதிக்காகவும் அழகர் அணை என்ற ஒரு திட்டம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசு பொருளாக உள்ளது. சுதந்திரம் பெற்று எத்தனை ஆட்சி மாற்றம் வந்தாலும் இது நிறைவேறியதாக இல்லை.

இந்த பின்னணியில் கரிசல் மக்களின் வாழ்வியலை நுட்பமாக பேசும் படைப்பு இது.

கடந்த கால முக்கிய நிகழ்வுகளை புனைவுகளில் பொருத்தமாக கையாள்வது நல்ல யுக்தி. அந்த அடிப்படையில்
தனுஷ்கோடி புயலில் குடும்பத்தை இழந்து அனாதை சிறுவனாக நிறைகுடம் கிராமத்தில் தஞ்சம் புகுந்து மக்களோடு நிறைந்துவிட்டவர் ஆதிமூலம்.

ஊர் மக்களால் நம்பிக்கையோடு வழிபட்ட பிள்ளையார் திடீரென்று களவாடப்படுகிறார். பிள்ளையார் இல்லாத ஊரில் மழை இல்லை, நல்லது கெட்டது இல்லை என்று புலம்பி மீண்டும் நிறுவ முயலும் ஊர்மக்கள். 

ஒரு குடம் குடிநீருக்காக அள்ளாடும் கிராமத்தின் வழியே நகரத்தின் குடிநீர் தேவைக்காக பதிக்கப்படும் பெரிய குழாய். தண்ணீர் செல்லும் சத்தத்தை காது கொடுத்து ஏக்கத்தோடு கேட்கும் மக்கள்.

இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் ஆற்றில் அணை கட்டி நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த மக்களை திரட்டி தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் இளைஞர் ராமகிருஷ்ணன்.

மக்கள் பிரச்சனைகளை படைப்புகளில் கையாள்வது சவாலானது. அதை திறம்பட செய்திருக்கிறார் நூலாசிரியர்.
மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை தற்காலத்தோடு பொருத்தி எழுதியிருப்பது சிறப்பு .

நூலாசிரியரே நல்ல ஓவியர் என்பதால்
ஆங்காங்கே தனது சிறு தூரிகைகளாலும் நாவலை அழகுபடுத்தியிருக்கிறார்.

கரிசல் சம்சாரிகளின் வாழ்க்கையை எழுத கிரா வின் பேனா மகேந்திரன் அவர்களின் கைக்கு வந்திருக்கிறது. இன்னும் நிறைய எழுதுவார்.

Comments