Monday, January 15, 2024

தருமபுரி மண்ணும் மக்களும்

 

தருமபுரி மண்ணும் மக்களும்

த.பழமலய்



பதிப்புரை

           2010 சென்னை புத்தக கண்காட்சியில் தற்செயலாய் காணக்கிடைத்தது தருமபுரி மண்ணும் மக்களும். மிகுந்த ஆர்வத்தோடு வாங்கி வந்தவுடன் படித்துவிட்டேன். 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியூரிலிருந்து வந்த மனிதர்  தர்மபுரியை அங்குலம், அங்குலமாக பதிவு செய்திருக்கிறாரே என்று வியந்து போனேன். மாவட்டத்தின் தொல்லியல், வரலாறு, ஆளுமைகள்,இடங்கள் என இந்நூல் புதிய பார்வையை தந்தது. தர்மபுரி பற்றிய பல அரிய செய்திகளை முதன் முறையாக அறிந்து கொண்டதுடன்,

 இந்நூலைப் படித்த பிறகுதான் மன்றோ தூணையும்,  குளத்தையும் பார்த்தேன். பதிகால்பள்ளம் சென்று வந்தேன்.  கோபால் செட்டியார் என்ற ஆளுமையை அறிந்து கொண்டேன். 

அப்போதே தொல்லியல் அறிஞர் பார்த்திபனிடம் தொடர்பெண் பெற்று பழமலய் அவர்களிடம் பேசினேன்.

 "ரிட்டையர்மென்ட் பணத்தில் புத்தகம் போட்டேன். புத்தகம் வந்து ஐந்து வருடம் ஆகுது.தர்மபுரியில் இருந்து புத்தகத்தை பற்றி பேசும் முதல் ஆள் நீதான். பலருக்கும் இலவசமா கொடுத்தது போக இன்னும் இருநூறு பிரதிகள்  இருக்கும். கரையான் புடிக்கிறதுக்குள்ள வந்து எல்லாத்தையும்  எடுத்துட்டு போயிடு" என்று சலிப்பாக சொன்னார்.

  இந்நூலின் மூலம் தர்மபுரி  மாவட்டத்தை பற்றி முழுமையான சித்திரத்தை தந்திருக்கும் பழமலை அவர்களுக்கு    மரியாதை செய்யும்பொருட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தவேண்டும்  என்று நினைத்தேன். ஆனால் இதுவரை சாத்தியமாகாமலேயே போய்விட்டது.

   பிறகு   2020  ல் தர்மபுரி புத்தகத்திருவிழா நினைவு மலரில் இந்நூலைப் பற்றிய அறிமுகக் குறிப்பு வெளியிட எண்ணியபோது என்னிடம் இருந்த பிரதி தொலைந்து போயிருந்தது. பழமலை அவர்களை தொடர்பு கொண்டதில் கைவசம் பிரதிகள் எதுவுமில்லை என்றும் ஒருவேளை கோவையில் இருக்கும் மகளிடம் இருக்கலாம்  என்றார்.

   மலரில்  தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் வெளியிடப்பட்டது. அதைப் படித்த நண்பர்கள் பலரும் முழு நூலைப் படிக்க ஆர்வம் கொண்டனர். அதன் விளைவே தற்போது இந்நூலின் மறுபதிப்பு.

 போக்குவரத்து வசதிகள்  இல்லாத காலத்தில்  சொந்த ஆர்வத்தில் மாவட்டம் முழுக்க பயணம் செய்து ஆவணப்படுத்திய மதிப்பிற்குரிய கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு மாவட்ட மக்கள்  காலமெல்லாம் நன்றி உடையவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சியோடு இந்நூலை மறுபதிப்பு செய்ய அனுமதியளித்த அவருக்கு நன்றி.

  நூலின் பிரதியை தந்துதவிய தென்றல்  பழமலை அவர்களுக்கும், பொருத்தமானதொரு அணிந்துரையை தந்து  சிறப்பித்திருக்கும் பேராசிரியர் ஆர்.சிவகுமார் அவர்களுக்கும் நன்றி.

     இந்நூல் எழுதப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன.  இடைக்காலத்தில் மாவட்டத்தின் சமூக, அரசியல், மக்கள் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இவற்றையெல்லாம்  அக்கறையோடு பதிவு செய்து ஆவணப்படுத்த நம்மில் யார் வரப்போகிறார்கள்?

 -இ. தங்கமணி ஆசிரியர்.

வெளியீடு:

திருவள்ளுவர் பொத்தக இல்லம்

தருமபுரி.

93602 24172




 

No comments:

Post a Comment